பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முகவுரை


தமிழ் மொழி தென்னிந்திய நாட்டிலுள்ள எல்லாச் சமயத்தார்க்கும் உரிய செம்மொழியாக இலங்குகின்றது. தமிழகத்திற் பிறந்த மதங்களும், புகுந்த மதங்களும் தமிழ் மொழியைப் பேணி வளர்த்தன. சைவரும், வைணவரும், சமணரும், சாக்கியரும் சிறந்த தமிழ் நூல்கள் இயற்றினர். மகமதியரும், கிருஸ்தவரும் தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்தனர்.

தமிழ் மொழிக்குத் தொண்டு செய்த கிருஸ்தவர்களிற் பெரும்பாலோர் மேலை நாட்டு மொழிகளை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் ஆற்றிய பணி பலவகைப் பட்டதாகும். தமிழ் நாட்டுக் கலைச் செல்வத்தை மேலை நாட்டார்க்குக் காட்டினர் சிலர். தமிழிலக்கியத்தின் பண்புகளைப் பாட்டாலும் உரையாலும் விளக்கியருளினர் சிலர். இலக்கண வாயிலாக ஆராய்ந்து தமிழின்தொன்மையையும் செம்மையையும் துலக்கினர் சிலர். மேலே நாட்டு முறையில் தமிழகராதி தொகுத்து உதவினர் சிலர். தெள்ளிய தமிழ் வசன நடையில் அறிவுநூல் இயற்றித் தொண்டாற்றினர் சிலர். இவ்வாறு பல்லோரும் இயற்றிய நற்பணியின் பயனாகத் தமிழ் தலையெடுத்து வருகின்றது.

இத்தகைய தமிழ்த் தொண்டு செய்த பெருமக்களில் ஒரு சிலருடைய வரலாற்றைச் சுருக்கமாகக் கூறுவது இந்நூல். சென்னை வானொலி நிலையத்தில் யான் நிகழ்த்திய பேச்சு முதல் மூன்று கட்டுரையாகச் சேர்க்கப்பட்டுகிறது. அந் நிலையத்தார்க்கும், இந்நூலை வெளியிடுவதற்கு அனுமதி தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும் என் நன்றி உரியதாகும்.

சென்னை,
20–12–1945

ரா. பி. சேதுப் பிள்ளை