பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயக சாஸ்திரியார்

71


ரிடம் ஒப்புவித்து விட்டுக் கலைவாணர் கலையினொடும் கவியினொடும். பொழுது போக்கினான். தஞ்சாவூரில் இன்றும் அறிஞர் போற்றும் சரஸ்வதி மஹால் என்ற அருமையான நூல் நிலையத்தை நிறுவியவன் அவனே. இத்தகைய சரபோஜி மன்னனுடன் நெருங்கிப் பழகும் நீர்மை வேதநாயகத்துக்கு இளமையிலேயே வாய்த்தது. இருவரும் சுவார்த்தையரை ஞானத் தந்தையாகக் கொண்டமையால் சகோதர முறையில் பழகி வந்தனர்.

சரபோஜியின் கொடைத் திறத்தையும் கலை நலத்தையும் பல தமிழ்ப் புலவர்கள் பாட்டிலமைத்துப் பாராட்டுவாராயினர். அவ்விதம் அம்மன்னன் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் ஒன்று சரபேந்திர பூபால. குறவஞ்சி நாடகம். குறவஞ்சி நாடகங்களுள் சிறந்த குற்றாலக் குறவஞ்சியையும், தஞ்சையில் அரசர் ஆதரவு பெற்று விளங்கிய சரபேந்திர குறவஞ்சியையும் பலமுறை கற்று இன்புற்றார் வேதநாயகம்; அவற்றைப் பின்பற்றித் தாமும் குறவஞ்சி நாடகம் ஒன்று இயற்ற ஆசைப்பட்டார். கர்த்தராகிய ஏசுநாதரையே பாட்டுடைத் தலைவராக வைத்துப் 'பெத்தலேம் குறவஞ்சி' யென்னும் பெயரால் ஒரு நாடகம் இயற்றினார். “சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம் - ஆதி - திரியேக நாதனுக்குச் சுப மங்களம்” என்பது அக்குறவஞ்சியில் உள்ள மங்கல வாழ்த்து. ஏசுநாதர் பெருமையைக் குறவஞ்சியின் வாயிலாக வெளிப்படுத்தும் தமிழ் நூல் இது ஒன்றேயாகும்.

இந்நூல் சென்னைமா நகரில் வேப்பேரிப் பாக்கத்துக் கிருஸ்தவ சபையில் அரங்கேற்றப்-