பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்


1. வீரமாமுனிவர்

மேலை நாட்டு நல்லறிஞர் பலர் தமிழ் நாட்டிற் போந்து சிறந்த தமிழ்ப் பணி செய்துள்ளார்கள். அவருள் இத்தாலிய தேசத்து வித்தகர் சிலர் ; ஜெர்மானிய தேசத்தவர் சிலர் ; ஆங்கில நாட்டைச் சேர்ந்தவர் சிலர். அவர்களால் தமிழ் மொழி பெற்ற நன்மைகள் பலவாகும்.

ஏறக்குறைய இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலிய தேசத்தில் பிறந்த பெரியார் ஒருவர் தமிழ் நாட்டுக்கு வந்தார். அவர் [1] யேசுநாதர் சங்கத்தைச் சேர்ந்தவர் ; இளமையிலேயே துறவறத்தை மேற்கொண்டவர். பெஸ்கி என்பது அவர் பெயர். தமிழ் உலகம் அவரை வீரமாமுனிவர் என்று போற்றுகின்றது.

தமிழ் நாட்டில் யேசு மத போதகம் செய்வதற்காகத் தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கினார் வீரமாமுனிவர் ; அந்நாளில் சிறந்த தமிழாசிரியர்களாக விளங்கிய சுப்பிரதீபக் கவிராயர் முதலியோரிடம் முறையாகத் தமிழ் நூல்களை ஓதி உணர்ந்தார். திருக்குறளின்


  1. யேசுநாதர் சங்கம்-Society of Jesus (S J ) 41—2