பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


20. தில்லுமுல்லு வீரன் தியாஜனிஸ்

உயிருக்கும் மேலாக, ஒலிம்பிக் பந்தயங்களை மதித்தார்கள் கிரேக்கர்கள். அதைப் புனித விழா என்று போற்றினார்கள். களங்கம் எதுவுமின்றி நடத்திட வேண்டும், என்று கவனத்தோடும் கருத்தோடும் பாதுகாத்தார்கள். தலைமைக் கடவுளான சீயசுக்குப் பன்றியைப் பலியிட்டு, அந்த ரத்தத்தின் மூலம் விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டு விளையாட்டுக்களைத் தொடங்கினார்கள். போர்க்காலமாக இருந்தாலும், ஆயுதங்களை வேறிடத்தில் வைத்துவிட்டு, ஓரிடத்தில் பொறுமை காட்டி அமைதி காத்து, பந்தயங்களை நடத்திடவேண்டும் என்று விதிமுறை அமைத்து வெற்றிகரமாக நடத்தினார்கள்.

அவர்கள் மத்தியிலே தீரமுள்ளவர்கள், தியாகப் பண்பு நிறைந்தவர்கள்தானே திகழ்ந்திட முடியும் தில்லுமுல்லுக்காரன் ஒருவன் வீரனாக சிறந்திருக்க முடியும் என்றால், அதுதான் தியாஜனிசிடம் இருந்த திறமை என்று ஒத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. திறமையின் முன்னே, சட்டமும் விதியும் சில சமயங்களில் சரணாகதியடைந்து விடவில்லையா? அது போல் தான்! அப்படி சட்டத்தை வளைத்தவன் கதையை இனி தொடர்ந்து காண்போம்.

தியாஜனிஸ் எனும் அந்த வீரன், தாசஸ் (Thasos) என்ற நகரத்தைச் சார்ந்தவன். அந்த நகரில் கிரேக்கக் கடவுளனா சீயஸ் எனும் கடவுளுக்கும் மனித இனத்தின் அழகு மங்கையான அல்க்மின் (Alcmene) என்பவளுக்கும் பிறந்த ஹிராகிலிஸ் என்பவனுக்கு ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் மதகுருவாக (பூசாரியாக) (Priest) வேலை செய்து வந்தவரின் மகன் தான் இந்த தியாஜனிஸ்.