பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

111


இவன் தன் பலத்தில், ஆற்றலில், மிகுந்த நம்பிக்கையையும் மாறாத கர்வத்தையும் வைத்துக் கொண்டு திரிந்தான். மிலோ தனது சிலையை, தானே தூக்கிச் சென்று ஒலிம்பியா மைதானத்தில் வைத்த வரலாற்று நிகழ்ச்சியை, இவன் என்றும் மறக்காமலேயே நினைவில் கொண்டிருந்ததால், அதைப்போல் தானும் ஒரு வீர தீர செயலைச் செய்ய வேண்டுமென்று விரும்பினான். அதனால் தனது எட்டாம் வயதில் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டான்.

நகரின் ஒரு மூலையில் எங்கேயோ இருந்த ஒரு கோயிலுக்குச் சென்று, அங்கு இருந்த சாமி சிலையை மட்டும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

சேதி அறிந்த அவ்வூரார், அவன் வீட்டுக்கு வந்து ஆத்திரத்துடன் திட்டித் தீர்க்கவே, அவன் தெரியாமல் செய்து விட்டான் என்று தியாஜனிஸின் பெற்றோர், பணிவுடன் வேண்டிக் கொண்டனர். அவன் செய்த பிழையை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

மீண்டும் அந்த சிலை இருந்த இடத்திற்கு, அவனே தூக்கிக் கொண்டு சென்று வைத்து விட்டால், அவனை மன்னிக்கிறோம் என்று ஊரார் உரைத்தவுடன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அதன்படி அந்த சிலையைக் கொண்டு சென்று வைத்த சாமர்த்தியசாலி அவன்.

வலிமையுடன், வேறுபல திறமைகளையும் வளர்த்துக் கொண்டு எழில் வீர வாலிபனானான் தியாஜனிஸ், ஒலிம்பியா சென்று, ஒலிம்பிக் பந்தயங்களில் 2 முறை வென்று புகழடைந்தான். ஒன்று குத்துச்சண்டைப்போட்டி, மற்றொன்று பங்க்ராசியம் எனும் போட்டி, அதாவது குத்துச் சண்டையும், மல்யுத்தமும் இணைந்து உருவான பயங்கரப்போட்டி அது.

அந்தப் பயங்கரப் போட்டியில், ஒரு வீரன் இன்னொரு வீரனை அடிக்கலாம். கடிக்கலாம். உதைக்கலாம். குத்தலாம்.