பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

113


வெகுமதிக்காகத்தான் தியாஜனிஸ் இவ்வாறு வெறி கொண்டு அலைந்தான் என்று அவன் அரிய வரலாற்றை ஆராய்ந்தோமானால், இவன் வெற்றிபெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தான் என்றும் அறிகிறோம். இப்படியும் ஒரு வீரன் இருந்தான் என்பதுபோல இவனும் வாழ்ந்தான் என்று தானே நம்மால் நினைக்கத் தோன்றுகிறது!

பாரசீகத்தார் படையெடுத்து வந்த போது, பந்தயத்தில் கலந்து கொள்ள இருந்த பயிலஸ் எங்கே? பந்தயத்தை மறந்து தன்னை மறந்து போரிட்ட தியாகம் எங்கே? வெற்றியும் வெகுமதியும் தான் சிறந்த வாழ்க்கை என்று வெறி பிடித்தலைந்த வீரன் தியாஜனிஸ் எங்கே?

கி.மு. 480 ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் சென்றான் தியாஜனிஸ், முதல் நிகழ்ச்சி குத்துச் சண்டை. இரண்டாவது போட்டி பங்க்ராசியம். இரு போட்டிகளிலும் கலந்து கொள்வதென்று தியாஜனிஸ் முடிவுசெய்திருந்தான்.

முதல் போட்டியாக குத்துச் சண்டைப் போட்டி (Boxing) நடந்தது. அதில், முந்தைய ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டையில் வெற்றி பெற்ற, பெருவீரன் ஈதியமஸ் (Euthymus) என்பவனுடன் பொருத நேர்ந்தது.

மிகவும் போராடியே தியாஜனிசால் அதில் வெற்றி பெற முடிந்தது. அதிகமாகக் களைத்துப் போயிருந்த தியாஜனிசுக்கு, அடுத்த போட்டியும் காத்திருந்தது. அதுதான் அந்தப் பயங்கர பங்கராசியப் போட்டியாகும்.

களைத்துப் போயிருந்த தியாஜனிஸ் போட்டியிட விரும்பவில்லை. ஒலிம்பிக் பந்தயத்தின் விதிகளின்படி, யாரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளவும் முடியாது. ஆனால் பங்கு பெறாமல் இருக்கவும் முடியாது இருந்தாலும் தியாஜனிஸ் விலகிக் கொண்டு போட்டி நடவாமல் தவிர்த்துவிட்டான்.