பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தெமிசா நகரத்து மக்களும், அஞ்சி நடுநடுங்கி வருடம் ஒரு பெண்ணைத்தானே இழக்கிறோம் என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ஆண்டுக்கு ஒரு முறை அழகான பெண்ணொருத்தியை அனுப்பிக் கொண்டிருந்தார்களாம். (பகாசூரன் ஒரு பையனையும் உணவையும் கேட்டதாகவும், பீமன் சென்று பகாசூரனைக் கொன்றதாகவும் நம் நாட்டுப் பாரதக் கதையில் இருக்கிறதே!)

வழக்கம் போல, பேய்க்குப் பெண்ணை அனுப்புகின்ற நாளும் வந்தது. கன்னிப் பெண்ணையும் தேர்ந்தெடுத்தாகி அனுப்புகின்ற சமயத்தில், ஈதிமஸ் அந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தான். அழகே உருவான ஒரு பெண் நிற்பதைக் கண்டான்.

அந்த அழகி சாகப்போகிறாள் என்பதை அறியாமல், அவள் அழகிலே தன் மனதைப் பறிகொடுத்தான் ஈதிமஸ். காலங் கடந்து போனநிலை என்று தெரிந்து கொண்ட பின்னும் எண்ணத்தை விட்டு விடவும் அவனுக்கு மனமில்லை.

தான் விரும்பிய பெண்ணுக்காகப் பேயுடன் போரிடவும் தயார் ஆனான். பேயைத் தோற்கடித்து, வென்று தொலைத்ததுமின்றி பெண்ணையும் மணந்து கொண்டான். அந்தத் தெமிசாநகரத்து மக்களுக்கு நிரந்தரவிடுதலையையும் அச்சத்திலிருந்து வாங்கித் தந்தான் என்பது ஒரு கதை.

இந்த ஈதிமசும் ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தன்னை ஒரு மனிதப்பிறவி என்று கூறாமல், தெய்வப் பிறவி என்று பேசினான். நதிக்கடவுளான காசினஸ் (Caecinus) தான் தனது தந்தை என்று கூறியதை பலரும் ஏற்றுக் கொள்ளத்தான் செய்தனர்.

பேயைக் கொன்ற கதையும் இவன் வாழ்க்கை வரலாற்றுடன் சேர்ந்து கொண்டது. மனிதனாக நடமாடி, ஆவியுடன் போராடி வாழ்ந்த ஈதிமஸ், நிலையில் இரண்டுங்கெட்டானாக இருந்தாலும், சரித்திரத்தில் வீரனுக்குரிய புகழ் நிலையிலிருந்து விழாமல் இன்றுவரை வாழ்ந்து வருகிறான்!