பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

129


24. வாயாடி டியோக்சிபஸ்

வாழ்க்கையில் மனிதன் உயர உயர, அவன் வாயடக்கமாகவும் நாணயமாகவும் நடந்துகொள்ளும் பொழுதுதான், அவன் பெறுகின்ற புகழும்பேறும் நிலைத்து நிற்கிறது. அவன் சிறிதளவு தன் நிலையிலிருந்து தாழ்ந்து விட்டாலும், அது அவன் புகழை இடித்துத் தூளாக்கும் வெடிகுண்டாகிவிடும். அதற்கு சான்றாகத் திகழ்கிறான் டியோக்சிபஸ்.

கி.மு.336ல் நடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் பங்கராசியம் எனும் போட்டியில் வெற்றி பெற்ற வீரன் டியோக்சிபஸ். எந்தப் போட்டியாளனும் இவனுடன் போட்டியிடப் பயந்து ஒதுங்கிக் கொண்டான் என்றால், இவனது வல்லமையின் மிகுதியை நினைத்துப் பாருங்கள் பெற்ற வெற்றியையும், பெருமை மிக பரிசையும் ஏந்திக் கொண்டு, டியோக்சிபஸ் தன் தாயகமான ஏதென்சுக்கு வருகிறான்.

வெற்றி வீரனுக்கு வீர வரவேற்பளிக்கிறது ஏதென்ஸ் நகரம், வலிமையின் தாயகமான ஏதென்ஸ் நகரமே திரண்டு வந்து, வானளாவிய வாழ்த்தொலியை எழுப்பி வரவேற்றது. உற்சாகம் பெற்ற மக்கள், வீரனை சாரட்டு வண்டியிலே உட்கார வைத்து ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் நடுவே ஒப்பற்ற உருவமாக அமர்ந்து, மமதையெனும் மகுடம் சூட்டிய பேருருவமாக அமர்ந்து வருகிறான். அவனது கண்கள் ஆச்சரியத்தால் தன்னைப் பார்க்கும் அனைவரின் மீதும் சுற்றி ஆலவட்டம் போட்டுக்கொண்டு வருகின்றன.

அந்தக்கும்பலிலே ஒருத்தி அழகுப் பெட்டகமாக நின்று கொண்டிருக்கிறாள். ஆண்மையின் உருவமாக அலங்காரத்துடன் வீற்றிருக்கும் டியோக்சிபசைப் பார்த்து, ஏதோ நையாண்டியாகப் பேசுகிறாள். பழுத்தமரத்தில் கல்லடி விழும். அதற்காக மரம் எதிர்த்து கல் வீசுவதில்லையே!