பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


டியோக்சிபஸ் தன்னை மறந்து விடுகிறான். ஒப்பற்ற ஒலிம்பிக் பந்தயத்தின் உன்னத வெற்றிவீரன் என்பதை மறந்துவிடுகிறான். பெண் பேசிய நையாண்டி வார்த்தைக்குத் தானும் பதிலடி தரவேண்டும் என்று விரும்புகிறான். வாயடக்கத்தை இழந்தவனின் வாய், வேறுவிதமாக வார்த்தைகளைப் பொழிந்தது.

ஏ பெண்ணை! இந்த வல்லமை வாய்ந்த மாவீரனின் கைகளில் ஏற்கனவே இருந்தவள் தானே நீ! இதோ உன் வல்லமை வாய்ந்த வீரனைப் பார்த்துக் கொள். அருகிலிருந்த அனைவரின் காதுகளிலும் தெளிவாகவே விழுந்தன அவன் கூறிய மொழிகள். அவளும் அவமானத்தால் கூனிக் குறுகிப் போனாள்.

வீரனின் வாய்வார்த்தைகள் வதந்தியாகப் பரவின. காட்டுத்தீயை விட வேகமும் கொடுமையும் மிக்கதாக அவ்வார்த்தைகள் பரவிச் சென்றன. அவன் வேடிக்கையாகக் கூறிய வார்த்தைகள், அவள் குடும்பத்தையே அதிரவைத்தன. அது அவள் தங்கையின் வாழ்க்கையையும் பாதித்தது. கேலி மொழி ஒரு குடும்பத்தையே பாழாக்கிவிட்டது!

நாடறிந்த ஒருவன் எதைப் பற்றிப் பேச வேண்டுமென்றாலும் யோசித்து, நாவடக்கத்துடன் பேச் வேண்டும் என்பது இதனால் புலனாகின்றதன்றோ!

டியோக்சிபஸ் மாவீரனாகத் திகழ்ந்ததால், அவனுக்கு அரண்மனையில் பணியாற்றும் பெரும்பேறு கிடைத்தது. அவன் மகா அலெக்சாந்தரின் மனங்கவர்ந்த வீரனாகி விட்டான். மன்னன் அருகில் இருந்திடும் வாய்ப்பும் கிட்டி விட்டதென்றால், மாபெரும் பொறுப்பும், வந்துவிட்டது என்பது தானே பொருள்!

பாரசீகத்தின் மீது படையெடுத்து விட்டிருந்தான் மகா அலெக்சாந்தம். படைகள் செல்கின்ற போது, மன்னனுடன் டியோக்சிபஸும் கூடவே செல்ல வேண்டியதாயிற்று.