பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

139




27. அதிகாரிகளிடத்திலே அதிகாரம்

இது வரை ஒன்பது கிரேக்க நாட்டுப் புகழ்மிக்க வீரர்களைப் பற்றி தெரிந்து கொண்டோம். புகழேணியில் அவர்களை ஏற்றி வைத்த ஒலிம்பிக் பந்தயங்கள் எல்லாம். இசைவிழா நாடகவிழா போல, மக்கள் மாமன்றம் கூடிநடத்தும் மதத்தின் பெயரால் அமைந்த திருவிழா போலவே நடத்தப்பட்டிருக்கின்றன.

மத விழாக்களைப் போலவே, கோயிலும் ஆராதனையும் கொண்டாட்டமும் ஆக, பந்தயங்கள் கோலாகலமாக அந்தந்த மாநிலத்தில் நடத்தப்பட்டன.

விளையாட்டுக்களை நடத்துகின்ற அதிகாரிகளாக ஹலேநாடிகை (Helanodikai) எனும் குழு மற்ற மாநிலங்களில் பணியாற்றும் நீதிபதிகளைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் பயங்கர விதிகளுக்கு உட்பட்டு, பங்கு பெற்றது போலவே அதிகாரிகளும் பயந்துகொண்டு தான் தங்களது முடிவைக் கூறவேண்டியவர்களாக இருந்தார்கள். சில சமயங்களில் அபராதம் கட்டுகின்ற நிலைமைக்கும் ஆளானார்கள் என்றால் பாருங்களேன்.

கி.மு. 396ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி இது. போலிமாஸ், லியான் என்று இரண்டு ஓட்டக்காரர்களிடையே ஏற்பட்ட முடிவின் பேதத்தால், முடிவு செய்த அதிகாரிகள் மாட்டிக் கொண்டார்கள்.

போலிமாஸ் என்பவன் தான் முதலில் வந்தான், வென்றான் என்று மூவரில் இருவர் தீர்ப்பளித்தனர். ஒருவரோ லியான்தான் வென்றான் என்று கூறினார். இதை அறிந்த லியான், அங்கிருந்த ஒலிம்பிக் கவுன்சிலிடம் சென்று முறைகேடு நடந்து விட்டது, நீங்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று முறையிட்டுக் கொண்டான்.