பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

141




28. பிறந்தமேனியும் பெருமையும்

விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்ற போட்டியாளர்கள், பிறந்த மேனியுடனே பங்கு பெற்றார்கள். அதற்கும் ஒரு சில காரணங்களைக் காட்டுகின்றார்கள் வரலாற்றாசிரியர்கள்.

கி.மு. 720ம் ஆண்டு, மெகாரா எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவீரன். அவன் பெயர் ஒரிசிப்பஸ். அவன் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டான். ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும்பொழுது பாதிவழியில், அவன் அணிந்திருந்த கால்சட்டை கழன்று விழுந்து விடுகிறது. என்றாலும் அவன் வெற்றி பெற்று விடுகிறான். ஆகவே ஒன்றுமில்லாமல் ஓடுகின்ற முறையே பின்பற்றப்பட்டது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

ஏதென்ஸ் நகரத்தார் புதுமை செய்ய வேண்டும் என்று விழைந்தார்களாம். ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு ஓட்டக்காரர் கால்சட்டை நழுவி விழுந்து, தடுமாறி அவரும் கீழே விழுந்துவிட ஏதுவாக இருப்பதால், எப்பொழுதும் பிறந்த மேனியுடனேயே ஓட வேண்டும் என்ற விதியை அமைத்து விட்டார்களாம்.

கிரேக்க நாட்டவர்கள், உடலை மிகவும் செம்மையுடனும் சிறப்புடனும், கட்டுடலாகவும் வைத்துக் கொண்டிருந்ததால், பிறர் பார்த்து மகிழவும், அவர்கள் மகிழ்ச்சியில் தாங்கள் மகிழ்ந்துபோகவும் கூடிய சூழ்நிலை அமைந்ததால், பிறந்த மேனி விதியை பெரிதும் ஆதரித்தனர் என்றும் ஒரு கருத்து கூறப்பட்டிருக்கிறது.