பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சீயஸ் கோயிலின் முன் சிங்காரமாக அணிவகுத்து நிற்பார்கள். அந் நிகழ்ச்சியினைப் பொதுமக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பார்கள். அப்பொழுது, அந்நிகழ்ச்சிகளைப் பெருமைபடுத்தும் பொருட்டு, 100 காளை மாடுகளை பீடத்திலே வைத்துப் பலியிடுவார்கள். விழாக்கோலம் விருந்துக் கோலத்தில் மகிழும். அன்று முழுதும் ஆனந்த ஆராவாரம் நிறைந்து, கிரேக்கம் முழுமையுமே எதிரொலிக்கும்.

நான்காம் நாள் ஒட்டப் பந்தயம் நடக்கும். அதைத் தொடர்ந்து, மல்யுத்தம், குத்துச் சண்டை, இருவர் செய்கின்ற தனிச் சண்டை (துவந்த யுத்தம்) நடக்கும்.

இவ்வாறு நான்கு நாட்கள் நடந்து முடிந்த பந்தயங்களைவிட, ஐந்தாம் நாள் நடக்கும் போட்டிகளே உண்மையான உடல் திறமைக்கும், உடல் வலிமைக்கும் நெஞ்சுரத்திற்கும், சோதனைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கின.

போர்க்களத்திலே ஒரு வீரன் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அணிந்துகொள்ளப் பயன்படுத்துகின்ற கவச உடைகளான. இரும்பாலான தொப்பி மார்புக் கவசம், கால் கைகளுக்குரிய ஆடைகள் அத்தனையையும் அணிந்து கொண்டு, தாண்டுதல், எறிதல், ஓடுதல் முதலிய ஐந்து போட்டிகளிலும் பங்கு பெறவேண்டும்.

இவ்வாறு ஒலிம்பிக் பந்தயங்கள், வடக்கே மலையும், தெற்கில் ஆல்பியஸ் என்ற ஆறும், மேற்கில் கிலாடஸ் என்ற ஆறும் அணி செய்ய, அமைந்துள்ள ஒலிம்பியாவின் கிழக்குப் பக்கமாக உள்ள ஹிப்போடிராம் என்ற பந்தயப் பாதையில்தான் குதிரைப் பந்தயம் தேர்ப் பந்தயம் நடக்க ஐந்து நாட்கள் சிறப்பாகவும் செழுமையாகவும் நடந்தன என்று வரலாற்றுச் சான்றுகள் விரித்துரைக்கின்றன.