பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வீரனுக்குப் புகழ் நிரம்பும், சிலை எழும்பும்... அவனைப் புகழ்ந்து பாடல்கள் பிறக்கும், இத்தனையும் வெற்றி வீரனுக்குத்தான்.

ஒலிம்பிக் பந்தயத்திலே கலந்து கொண்டு தோற்றவனுக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்? தலை குனிவுதான்; அவமானம்தான், சரிதான் கிடக்கட்டும் என்ற சமாதானம் கூட கூறவேண்டாம்!.... எவரும் ஏறெடுத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்... ஏளனப் பார்வை எதிரே வந்து அவர்களை அம்பாய் குத்தும், புன்னகை புரிவோர்கூட இருக்க மாட்டார்கள் என்ற இழிநிலை ஏற்படும், அந்த அளவுக்குத் தோல்வியை அவர்கள் எதிர்த்தார்கள். பகைத்தார்கள்.

தோற்றவர்கள் படுகின்ற பாடுதான் அவர்களுக்குத் தெரியுமே! தோல்வியை வீரர்கள் தாங்கிக் கொண்டாலும் அவன் வசிக்கின்ற நகர மக்கள் விரும்ப மாட்டார்கள். தோல்வியைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் என்று போட்டியிடும் வீரர்களுக்கும் தெரியும்! சீயஸ் கோயில் முன்னே, பன்றி ரத்தத்தைத் தொட்டு, நாங்கள் வெற்றி பெறுவதற்காகக் குறுக்கு வழியை, கீழ்த்தரமான செய்கைகளைப் பின்பற்ற மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாலும்கூட, ஒரு சிலர் வெற்றி பெறுவதற்காக குறுக்கு வழியைக் கையாளாமல் இல்லை.

98வது ஒலிம்பிக் பந்தயம் நடந்தபோது ஒரு நிகழ்ச்சி, குத்துச் சண்டையில் கலந்து கொண்ட எபிலஸ் என்ற வீரன், தன்னுடன் போட்டியிடுவதற்காக இருந்த மூன்று வீரர்களுக்கு. லஞ்சம் கொடுத்து, தன்னுடன் போட்டியிட வேண்டா மென்றும், தன்னை வெற்றி வீரனாக (Champion) ஆக்கி உதவ வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டான்.