பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

75


அந்தப் பந்தயங்களிலே மாபெரும் மன்னர்கள் மட்டுமல்ல; வாழ்க்கையின் அடிமட்டத்தில் வாழ்ந்த குடிமக்கள் வரை சமமாகப் பங்கு பெற்று போட்டியிட்டனர், வெற்றி பெற்றனர். விரும்பிய புகழ் பெற்றனர்.

முதன் முதலாக நடந்த ஒலிம்பிக் பந்தயத்திலே வெற்றிபெற்ற வீரனின் பெயர் எல்லிஸ் நகரத்தைச் சேர்ந்த கரோபஸ் என்பதாகும். அவன் செய்த தொழில் சமையல், சமையல்காரனாக வாழ்ந்த கரோபஸ், உணவை மட்டும் சமைக்க கற்றுக் கொண்டிருக்கவில்லை. உடலையும் சீரும் சிறப்புமாக அமைக்கக் கற்றுக் கொண்டிருந்தான். வெற்றி பெற்றான். சாதாரண குடிமகன் அவன் மட்டுமா வெற்றி பெற்றான்?

பேரறிஞர் என்று புகழப்பட்ட பிளேட்டோ கூட தன் இளமை வாழ்வில் ஒரு முறை மல்யுத்தப் போட்டி ஒன்றில் வெற்றி வீரராக வந்து பரிசு பெற்றிருக்கின்றார்.

சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காத்த, நம்மால் மகா அலெக்சாந்தர் என்று வருணிக்கப்பட்ட அலெக்சாந்தர்கூட போட்டியிட்டுத் தோற்றிருக்கிறார். யார் தோற்றார் யார் வென்றார் என்பது அங்கு பிரச்சினை இல்லை. திறமைதான் அங்கு ஆட்சி செய்தது.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியிலே, பெரிய சரித்திர ஆசிரியரான கிரடோடசும் தத்துவ மேதையான சாக்ரட்டீஸீம் பெருங்கவியான பிண்டாரும், சீயஸ் என்ற கடவுளின் சிலையை செதுக்கிய ஓவிய மேதையான பிடிலசும் உலவிய இடத்திலே. மாமன்னன் அலெக்சாந்தரும் மகாகர்வம் நிறைந்த நீரோ மன்னனும் பங்கு பெற்ற பந்தயக் களத்திலே, தனி மனிதனின் திறமையே கொடிகட்டிப் பறந்தது. திறமையை மட்டுமே வாழ்த்தினர். வரவேற்றனர், சிலையாக்கினர், சிறப்புமிக்கப் பாடல்களில் புகழ்ந்தனர்.