பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


சிறந்த உடல் உள்ளவர்களால்தான் சிறந்த கலைகளையும், சிறப்பான இலக்கியங்களையும் உருவாக்க முடியும் என்று தமிழினம் காட்டிய வரலாற்றுக்கு, இன்னும் ஒரு சான்று கிரேக்க இனந்தான். வளமான உடலில்தான் வளமான மனம் வாழும், வளரும், உண்மைதானே!

ஒன்றுக்கொன்று பகை நாடாக இருந்தாலும் கூட ஒலிம்பிக்பந்தயத்திலே ஒற்றுமையும் அமைதியுமே ஓங்கி இருந்தது. பங்கு பெற்றவர்கள் பயமில்லாமல் வாழ்ந்தனர், பகையில்லாமல் பழகினர். போட்டி நிகழ்ச்சிகளிலே பொருதினர்.

பந்தயங்களிலே படபடப்பு இருந்தது பரபரப்பு இருந்தது. உணர்ச்சி மயம் நிறைந்து இருந்தது உற்சாகம் பொங்கி வழிந்தது. வெற்றி பெற்றவர்கள். சிரித்தார்கள். ஆனந்த வெறியிலே விழுந்து புரண்டார்கள் தோற்றவர்கள் துடித்தார்கள். துவண்டார்கள். அழுதார்கள். கூனிக்குறுகிப் போனார்கள். போட்டியாளர்கள் மட்டுமல்ல - பார்வையாளர்கள் கூட தோற்றவர்களுக்காக அழுதார்கள். வெற்றி பெற்றவர்களுக்காக கைதட்டி மகிழ்ந்தார்கள், விண்ணளாவக் கத்தி வாழ்த்தினார்கள்.

இவ்வாறு, ஒலிம்பிக் பந்தயம் முழுவதும் உணர்ச்சி மிக்கக் கலை வண்ணமாகவே திகழ்ந்தது. எத்தனையோ பகுதிகளிலிருந்தும், பட்டி தொட்டிகளில் இருந்து மூலை முடுக்குகளில் இருந்தும் வீரர்கள் போட்டியிட வந்தார்கள். அவர்கள் வந்த பகுதியை, வாழ்ந்த இடத்தை மறந்து, ஒலிம்பியா பந்தயக் களத்திற்குள் நுழைந்தவுடன் தன்னையே மறந்து, தான் ஒரு ஒலிம்பிக் வீரன் என்ற ஒரே நினைவுடன் ஒரே இனத்தவராக மாறிவிட்டனர். இறைவனது திருப்பெயரைக் கூறி, தன் திறமையை வெளிப்படுத்த முனைந்தனர் என்ற அளவிலேதான் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து வந்தன. இன்பங்களை அள்ளித் தந்தன.