பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மிலோ மல்யுத்தத்தில் கெட்டிக்காரன், அவன் மாணவர்களுக்காக (Boys) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில்தான் முதன் முதல் பங்கு பெற்றான். அந்த ஆண்டு கி.மு. 540. அதன் பின், மனிதர்களுக்கான (Men) மல்யுத்தப்போட்டியில் 5 ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி பெற்றிருக்கிறான். அதாவது 20 ஆண்டுகள் தொடர்ந்தாற் போல் (கி.மு. 540 லிருந்து கி.மு. 520 வரை) அவனே வெற்றி பெற்றிருக்கிறான். அவனை வெல்ல யாருமே இல்லை என்ற வல்லமை மிக்க வீரனாகவே விளங்கி இருக்கிறான்.

இதற்கிடையிலே நடைபெற்ற பிதியன் பந்தயங்களில் 6 முறையும், இஸ்த்மியான் பந்தயங்களில் 10 முறையும், நிமியன் பந்தயங்களில் 9 முறையும், வெற்றி பெற்று சிறந்த வீரனாகவே விளங்கியிருக்கிறான் மிலோ.

இவ்வாறு 6 முறை ஒலிம்பிக் பந்தயங்களில் மல்யுத்தத்தில் வெற்றி பெற்ற வீரன் மிலோ, ஏழாவது தடவை ஒலிம்பிக் பந்தயத்தில் கலந்து கொண்டபோது டிமாஸ்தியஸ் என்ற ஒரு வீரனிடம் தோற்றுப்போனான்.

ஒரு மனிதன் குறைந்தது ஏழு அல்லது எட்டு ஆண்டுகள்தான் தன் உடலில் ஆற்றலில், குறையாமல் வைத்திருந்து திறம்பட செயல்பட முடியும். அதற்கு மேல் ஆற்றல் வரவரக் குறைந்து போய்விடும் என்று தற்போதைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறுகின்றனர்.

நான்காண்டுகளுக்குள்ளே ஒரு மனிதனின் ஆற்றலும் ஆண்மையும் முன்பிருந்ததைவிட நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே வருகின்றது என்கின்ற தத்துவத்தினைக் கொண்டுதான். நான்காண்டுகளுக்கு ஒரு முறை பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் நடத்தப் பெற்றன என்பதற்கும் ஒரு கதை கிரேக்கத்தில் உண்டு.