பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89


11. சமய வாழ்வு

பண்டைக் காலத்துக் கிரேக்கர்களின் வழிபடு தெய்வங்கள் அவர்களாலேயே அமைத்துக் கொள்ளப்பட்டவை. சமயம் என்னும் சொல் அவர்கட்கு மிகமிக ஏற்புடைத்தான சொல்லாகும். செய்து கொள்ளுதல் என்பதுதானே சமயம் என்பதன் வேர்ப்பொருள். அவர்கள் தெய்வங்கள் யாவும், அவர்களின் செல்வ நிலைக்கும் அழகிய தோற்றங்களுக்கும் உட்பட்ட எழுச்சிகளாகும். சுவையாகப் பல்வேறு கதைகள் தெய்வங்கள் ஈடுபட்டு நடத்தினவாக அவர்களால் புனையப்பட்டன.

கிரேக்கர்கள் போற்றும் தெய்வங்களில் ஸீயஸ் (Zeus) என்னும் பெயரிதே சிறந்ததாகும். நாம் கருதும் மன்மதனை இதற்கு ஒப்பிடலாம். அவர் பருகும் திராட்சைச் சாற்றிற்கும் உரிய கடவுளாகப் பேக்கஸ் (Bacchus) என்னும் தெய்வத்தைக்கொண்டிருந்தனர் இதனோடு நம் மதுரை வீரனை இணைத்து நாம் கருதலாம்.

சகுனம், கனா முதலிய கொள்கைகளில் கிரேக்கர்கள் பெரிதும் நம்பிக்கையுடையவர்கள். சகுனம் பார்ப்பதிலும் கனவின் பலனைக் கருதுவதிலும் நம் பண்டைய தமிழரும் பின்வாங்கியவரல்லர். சகுனத்தை விரிச்சி என்று கூறி வந்தனர். இவ்வாறே நம்மவர் கனாவின் பயனை நன்குணர்ந்தவர் என்பதைச் சிலப்பதிகாரத்துக் கனத்திறம் உறைத்த காதையாலும் தெளிய உணரலாம்; சீவக சிந்தாமணியில் விசயை கண்ட கனவின் மூலமும் அறியலாம்.