பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90


அவர்கள் தொடங்கும் புதிய தொழிலில் ஏதேனும் முதலில் சகுனத்தடை ஏற்பட்டால் அதனால் தீங்கே விளையும் என்று தீர்மானித்திருந்தனர். மாந்திரிகத்திலும் அவர்களுக்குப் பெரிதும் நம்பிக்கை உண்டு. அவர்கள் சகுனத்தில் ஆழ்ந்த கருத்துடையவர்கள் என்பதை எதினியர்களின் போர்க் கப்பல் சிசிலியோடு போர் புரியப் புறப்பட ஆயத்தமாய் இருக்கையில், அன்று இரவு அவர்களின் தெய்வ உருவங்கள் யாவும் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டதனால், தீங்கு நிகழும் என்று எண்ணிப் பயணத்தை நிறுத்திக் கொண்டதனை இன்றும் நன்கு அறியலாம்.

தம் மீது மருள் ஏறப் பெற்றவர்கள் ஏதேனும் கூறினால் அதனை அப்படியே நம்பி அதன்படி நடக்கும் தன்மை கிரேக்கர்பால் குடிகொண்டிருந்தது. எந்தக் கிரேக்கனும்தான் திராட்சைச் சாற்றைப் பருகுவதற்கு முன் சிறிது நிலத்தில் ஊற்றிய பிறகே தான் உட்கொள்வான். இவ்வாறு செய்வது தன் தெய்வத்திற்கு முன் கொடுத்துப் பின் தான் உட்கொள்வது என்னும் கருத்தினலாகும்.

இந்த முறை நம் இந்தியப் பொதுவாழ்விலும் இருப்பதைக் கவனிக்கலாம். நீரைப் பருகும்போது சிறிது பூமியில் கொட்டுகிறோம், உணவு கொள்ளும் போது ஒரு பிடி சோற்றை இலையில் பிடித்து வைக்கிறோம்; அன்றிக் காக்கைக்கும் வைக்கிறோம். அப்போது காக்கைகள் கூட்டமாக வந்து உண்ணுவதைத் தாயுமானவர், ‘காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்’ என்றும் பாடிவிட்டார்.