பக்கம்:குதிரைச் சவாரி.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்று மாலை அவன் கடற்கரைக்குப் போகவேயில்லை. ‘போனால் அகப்பட்டுக்கொள்வோம்’ என்ற பயம் அவனுக்கு. வீட்டிலேயே இருந்துவிட்டான்.

இது அவனுடைய அம்மாவுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. “மோஹன், இந்தக் கோடை விடுமுறையில் நீ தினமும் மூன்று மணிக்கே கடற்கரைக்குப் புறப்பட்டுவிடு வாயே! இன்றைக்கு ஏன் போகவில்லை ?” என்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை, அம்மா. தினசரி கடற்கரைக்குப் போய், சலிப்புத்தட்டிவிட்டது” என்று சமாதானம் கூறினான் மோஹன்.

இப்படியே அவன் ஒரு வாரம் கடற்கரைக்கே போகாமல் காலம் தள்ளிவிட்டான். அதுவரை குதிரைக்கார முனுசாமி அவனைத் தேடி வராதது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.