பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிறந்த கற்புடைய பெண் தெய்வம் தொழமாட்டாள். தெய்வம் கடவுளாகாது. தெய்வம் என்ற சொல்லைப் பெரும்பாலும் சிறு தெய்வங்கள் மேற்றே அறிஞர்கள் ஏற்றுவர். கணவனைக் கூட்டுவிக்கும் காமதேவதையைத் தொழுதலையே "பீடன்று" என்று மறுத்தாள் கண்ணகி. காரணம், தெய்வத்தைத் தொழும்பொழுது தன் கணவனின் குற்றத்தைக் கூறித் தொழவேண்டும். தன்னுடைய கணவனின் பழியை மற்றவர் அறியக்கூறுதலும் தூற்றுதலும் கற்புடைப் பெண்ணுக்கு அழகல்ல. அதனையே, பிறிதோரிடத்தும் திருவள்ளுவர், சொல் காத்தலையும் பெண்ணுக்குக் கடமையாக்கினார். ஆதலால், தெய்வம் தொழுகின்ற பழக்கத்தைக் கற்புடைப் பெண்ணுக்கு திருக்குறள் விலக்குகிறது.

"கொழுநன் தொழுதெழுவாள்” என்பது கற்புடைய பெண்ணின் அடுத்த இலக்கணம். திருக்குறளின் சொல்லமைப்பு ஆழ்ந்த சிந்தனைக்குரியது. "தொழுதல்” என்பதற்கு உடலால் செய்யும் வணக்கம் என்பது மட்டும் பொருள் அன்று. உள்ளத்தால் உணர்வில் ஒன்றாகி-உணர்வு தலை காட்டும்பொழுதெல்லாம் இனந்தெரியாத பணிவும், பரிவும் கொண்டு வாழ்தலென்றும் பொருள் கொள்ள வேண்டும். "தொழுது எழுவான்" என்ற சொல்முறை வைப்பு இந்தப் பொருளையே சிறப்பாகத் தருகிறது. உடல் வணக்கம் என்றே பொருள் கொள்வதாயின் "எழுந்து தொழுதல்” என்ற முறைவைப்பு இருக்க வேண்டும்.

அடுத்து, உணர்வில் கலந்து ஒன்றான பெண்ணுக்கு கணவனின் இயல்பு, குறை, நிறை, தேவை அனைத்தும் தெரியும். அவனுக்கு எது, எப்பொழுது தேவையோ, அப்பொழுது அவ்வண்ணம் அவள் துணை செய்வாள். வேளாண்மை செய்த ஒருவன் விரும்பியபொழுது மழை பெய்தால் அம்மழையினால் அவனடைந்த வேளாண்மைப் பொருள் பெருக்கமும், மன மகிழ்வும் அளவிடற்கரியன. அது போலவே, உற்ற இடத்து உரியவாறு துணை செய்யும்