பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வித்துமிடல் வேண்டுமோ?

தமிழர் நாகரிகத்தின் மிகச் சிறந்த ஒழுக்கம் விருந்தோம்புதல். உண்பதன்முன், தன் வீட்டு முகப்பில் உணவருந்த வேண்டியவர்கள் யாரேனும் உளரோ என்று பார்த்து, அவ்வாறு எவரேனும் இருந்தால் அவர்களை அழைத்து உண்பித்துப் பின்னர் தாம் உண்பதென்பது தமிழர்களின் விழுமிய ஒழுக்கம். விருந்தினர்கள் சுதந்திரமாக-உரிமையுடன் வந்து தங்க திண்ணைகள் அமைத்து வீடு கட்டுவது நமது மரபு.

திருமூலர் திருமந்திரம்,

"யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி"

என்று வரையறுத் தோதுகிறது.

விருந்தோம்பும் சால்பினர் வாழும் ஊரில் அடிக்கடி அயலூர்ச் சான்றோர் வருவர். அவ்வழிச் சிறந்த அறிஞர்கள், புலவர்கள், முனிவர்கள் ஆகியோருடைய உறவும் உள்ளக் கருத்தும் எளிதிற் சமுதாயத்திற்குக் கிடைக்கும். வந்தோரை உண்பித்தலின் காரணமாக அவ்வூரின் புகழும் பரவும்.

இத்தகு சிறப்புக்களுக்குக் காரணமாகத் திகழ்கின்ற நல்லோரின் கழனிகள் நல்லோரின் உடைமைகள் உரிமையால் ஒருவருடையவையாக இருப்பினும் அதன் விளைவுகள் பலருக்கும் பயன்படுவதன் காரணமாக உரிமையாளரைவிட ஊரினரே அவர்தம் உடைமைகளைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவார்கள். அவர்களே விருந்தோம்பி வேளாண்மை செய்வோரின் நிலங்களை வளப்படுத்துவதோடு மட்டுமின்றி, விதைகளும் தூவுவார்கள். அங்கே, உடைமை உரிமை உணர்வு-இன்மையுணர்வு இரண்டுக்கும் மோதல் ஏற்படாது. ஏற்பட்டால் ஒரு சிறந்த சமுதாய அமைப்பே கால் கொள்ளுகிறது. அதனாலேயே திருவள்ளுவர்.