பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 243


வற்றுள்ளும் தலையாயது நன்றியறிதல். சிசிரோ என்ற பேரறிஞன் 'நற்குணங்களுக்கெல்லாம் தலையாக விளங்கும் நற்குணம் நன்றி காட்டுதல்' என்றும் எல்லாக் கடமைகளுக்கும் மூலமுதல் நன்றி காட்டும் குணம் என்றும் கூறிச் சிறப்பிக்கிறார். அதாவது, ஒருவர் செய்த நன்மையை - உதவியைப் பாராட்டி நினைவிற் கொண்டு கடமைகளாற்றுதல். நன்றி காட்டும் ஒழுக்கம் சொல்லி வரக்கூடியதன்று. இயல்பாகவே மனிதன் கொண்டு ஒழுக வேண்டிய ஓர் ஒழுக்கம். அதனாலன்றோ திருவள்ளுவர் 'செய்ந் நன்றியறிதல்' என்றே குறிப்பிட்டார்.

வாதவூரடிகள் தமது தேனமுதத் திருவாசகத்தில் அடிக்கடி நாயினை இழுப்பார். நாயினுங் கடையேன் என்ற சொற்றொடர் பெருகிக்கிடக்கின்றது திருவாசகத்தில். ஆதாவது, நாய்க்கு நன்றிகாட்டும் உணர்ச்சி உண்டு. பகுத்தறிவு படைத்த மனிதனாகிய எனக்கு அக்கீழான நாய்க்குள்ள குணமும் இல்லாமற் போயிற்றே என்பது குறிப்பு. நாயும்கூட மனிதனை நோக்க நன்றி காட்டும் உணர்ச்சியில் பாராட்டக்கூடியதே யன்றி அதனிடத்திலும் முழுமையாக நன்றி காட்டும் பண்பில்லை.

இறைவனின் திருவருளைப் பெறுதற்குரிய வாயில்கள் கருணை காட்டுதல், நன்றி காட்டுதல் ஆகியவைகளேயாம். இறைவன் மகிழ்வுடன் தங்கியிருக்கும் இடங்கள், ஒன்று சொர்க்கம் அல்லது விண்ணுலகம். மற்றொன்று அமைதியான நன்றி காட்டும் பண்பிற் சிறந்த உள்ளம். ஆதலால் நன்றியறிதல்-நன்றி காட்டுதல் என்பது உலகியல் ஒழுக்கம் மட்டுமன்று, அருளியல் ஒழுக்கமுமாகும்.

உலகில் செய்யக்கூடாத பாவங்கள் பல. அவற்றை யெல்லாமே செய்தாலும், வருந்துதல், நோன்பிருத்தல் முதலியவைகள் மூலம் கழுவாய் தேடிக்கொள்ளலாம் என்றும் நன்றி மறக்கும் தவறு செய்தால் கழுவாய்