பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமத் துடைத்தவர் நட்பு." (107)
எச்சத்தால் காணப்படும்

னித குலத்தின் விழுமிய சிறப்புக்களுள் ஒன்று தன்னை அவ்வப்பொழுது நினைந்தும், நினைவுறுத்தியும் ஒழுக்க நெறிப் படுத்திக் கொள்வதாகும். இவ்வாறு ஒழுக்க நெறிப்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு இன்றியமையாத தேவை பகுத்தறிவு. இங்கு பகுத்தறிவு என்பது நன்மை தீமைகளின் கூறுபாடுகளை ஆராய்தலும், அறிதலும் ஆகும். அங்ஙனம் ஆராய்ந்தறிகின்ற போழ்து, சார்பின்றி ஆராய்தல் வேண்டும். செய்திக்கு உரியாரிடத்திலும், அச்செய்தியால் விளையக்கூடிய பலாபலன்களிலும் பற்றுதல் இருக்கு மானால் பகுத்தறிவுத் தரத்துடன் செயல்பட முடியாது. ஒன்றை அல்லது ஒருவரைச் சார்ந்து நின்று ஆராய்வதற்குப் பகுத்தறிவு என்று பெயரில்லை. எந்த விதமான சார்பும் பற்றுக்கோடும் விருப்பும் வெறுப்பும் இன்றிச் செய்தியைச் செய்தி அளவிலேயே ஆராய்ந்து அறிதலும், அவற்றை வலியுறுத்தலும் தம்மைச் சார்ந்தோரை வழி நடத்துதலும் போற்றுதலுக்குரிய பண்பாடாகும். இப்பண்பாட்டையே "நடுவு நிலைமை" என்ற அறநூல்களும் ஒழுக்க நூல்களும் வலியுறுத்துகின்றன.

திருவள்ளுவர் நடுவு நிலைமை என்றே ஒரு அதிகாரம் வைத்தார். நடுவு நிலைமைக் கொள்கையை மேற்கொண் டொழுகுதலை. "தவம்" என்று கூடச் சொல்லலாம். நடுவு நிலைமைக் கொள்கையை ஏற்றுக் கோடலில் வருகிற இடுக்கண்களைத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலிலே பேராசிரியர் விளக்குகின்றார்.

செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும்
நெஞ்சோர்ந் தோடா நிலைமை.