பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 253



குடிமை

ழுக்கம் என்பது ஒன்றல்ல - இரண்டல்ல. பல கூறுகளை உடையது. எனினும் இரண்டு பெரும் பிரிவாக ஒழுக்க நெறியை வகைப்படுத்தலாம். தனி மனிதன் தன்னுடைய வாழ்க்கை வட்டத்தில், தனக்காகக் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் ஒன்று. பிறிதொன்று, தனிமனிதன் தான் வாழும் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளும் முறையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைக் குடிமை ஒழுக்கம் என்று சொல்லலாம். இதையே தான் குடிமைப் பயிற்சி என்று தமிழிலும், Citizenship என்று ஆங்கிலத்திலும் வழங்குகிறார்கள்.

ஒரு நாட்டின் பெருமை அந்நாட்டுக் குடிமக்களின் சிறப்பாலேயே அமைகின்றது.

குடிமக்களின் நிலையுயர சமுதாயக் கூட்டு ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமையாதது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய வாழ்வியல் நூலை ஆக்கித்தந்த திருவள்ளுவர் இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றார். திருக்குறளின் ஒழிபியலே குடியியல் பேச எழுந்ததாகும்.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.” (133)

என்பது குறள். இக்குறளுக்குச் சாதிகள் வழிப்பட்ட நச்சு நாகரிகச் சூழலில் வாழ்ந்த பரிமேலழகர் சாதி முறைகளுக்கு உட்பட்டு உரை எழுதுகின்றார். ஒழுக்கத்திற்கு அவர் தரும் விளக்கம் "அவரவர் வருணத்திற்கேற்ற ஒழுக்கம்” என்பது. வள்ளுவத்தில் இல்லாத வருணத்தைக் கூட்டிக் கலக்க முயற்சிக்கிறார். ஆனால் திருவள்ளுவர் கருதிய கருத்து வேறு. ஒரு மனிதன் ஒரு பெரிய சமுதாயத்தில் ஓர் உறுப்பினனாக இருக்கவேண்டு மானால், அந்தச் சமுதாயம் முழுமைக்கும்