பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 263


"அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.” (168)

என்பது திருக்குறள். பாவங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பதால் அழுக்காற்றைப் 'பாவி' என்று குறிப்பிடுகின்றார். அழுக்காறு வேறு - பாவி வேறல்ல, என்ற கருத்தை விளக்குவதற்காக “என ஒரு பாவி" என்று குறிப்பிட்டிருக்கிறார். சில தீமைகளை யாரை நோக்கிச் செலுத்தப்படுகிறதோ அவர்களுக்கே - செலுத்துவோர்க்குத் தீமை தராது; செலுத்தப்படுவோர்க்கே தீமை தரும். அமுக்காறோ பெரும்பாலும் செலுத்துவோர்க்கே அதிகத் தீமை தரும். அழுக்காற்றின் நிலைக்களன்கள் பெரும்பாலும் செல்வமுடைமை, அறிவுடைமை. புகழுடைமை ஆகியன வாம். இவற்றை, மற்றவர்கள் பெற்று விளங்குவதைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமலும் அவற்றை அவர்களைப் போல நன்கு முயன்று பெறத் தமக்கு ஆற்றல் இல்லாமையாலும் தோன்றுவதே அழுக்காறு. அழுக்காற்றின் காரண மாகப் பிறருடைய செல்வம், அறிவுடைமை, புகழுடைமை ஆகியவற்றிற்குக் குற்றம் குறைகளைக் கற்பித்து அழுக்காற்று நெஞ்சுடையோர் களங்கப்படுத்துவர். இதன் விளைவு, தன் முயற்சியை அழித்துக் கொள்ளுதல், பிறர் முயற்சிக்கும் ஊறு விளைவித்து அழித்தல், பொதுவில் - முடிவாக, முன்னேற்றமும் ஆக்கமும் தடைப்படுகின்றன. இதனை விளக்க வந்த திருவள்ளுவர் 'திருச் செற்றுத் தீயுழி உய்த்துவிடும்' என்றார். அழுக்காறுடையான் ஒருவன் செல்வத்தைப் பெறுவதற்குரிய முயற்சிகளில் ஈடுபட மாட்டான். அவனுடைய முழுநேர வேலை குற்றங் காணல், தூற்றல், தீங்கு விளைவித்தல் ஆகியனவே. இத் தீயவரிடம் செல்வம் எப்படிச் சேரும்? ஆதலால் செல்வத்தை அழித்து என்றார். செல்வம் இன்மையின் காரணத்தாலும், அழுக்காற்றின் காரணத்தாலும் பல்வேறு தீச்செயல்களைச் செய்வதால் நரகத்திற்குச் செல்ல ஏதுவாகிறது. இதனைத்