பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூடியதை வலியத் தாமே சென்று மற்றவர்களிடம் சொல்லுதலைக் குறிக்கும். அதனால், குற்றங்களைச் சொல்லுதல் தீது. குணங்களைச் சொல்லவேண்டும். குற்றங்களைப் பேசவேண்டும் என்கிறார் அப்பர் அடிகள். பேசுதல் என்பது நேரில் நின்று பேசுதலைக் குறிக்கும். ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும்பொழுது அவர்தம் குற்றங்களை இனிய முறையில் எடுத்துக்காட்டிப் பேச வேண்டும். அது குற்றமுடையார் திருந்துதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனையே திருவள்ளுவரும்,

"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.” 184

என்று குறிப்பிடுகின்றார்.

புறங்கூறுபவர்கள் -- பிறர் குற்றம் பேசித் திரிபவர்கள் அறம் பேசுவது போல நடிப்பார்கள். நன்மைக்காகப் பரிந்து பேசுவதாகப் பாவனை காட்டுவார்கள். நடிப்பிலும் பாவனையிலும் மயங்குகிறவர்கள், அவர் கூற்று உண்மையோ என்று ஐயப்படுவார்கள். ஐயத்தின் வழி களங்கம் பிறக்கும். களங்கத்தின் வழி மனங்கலந்த நட்புக்கெடும். பிரிவர் - பேதுறுவர். அதனாலன்றோ தமிழ் மறை. 'ஆழ்க தீயது' என்றோதுகிறது. தீயவர் அழிதல் அன்று. அதனாலன்றோ, புராணங்களிலும்கூட, அரக்கர்கள் தீமையொழித்து நல்லவர்களாக மாறி வளர்ச்சியுற்றுத் திருவருளுக்குப் பாத்திரரானார்கள் என்ற செய்தி பேசப் பெறுகிறது.

சொற்களால் பகை வளர்க்கும் ஒருவர் நெஞ்சம் எங்ஙனம் அறச்சார்புடையதாக இருக்க முடியும் என்பது வள்ளுவர் கேள்வி. புறங்கூறுபவர் சொல்லை நம்ப வேண்டாம்.

நெஞ்சத்தின் இயல்பு எதுவோ, அதை விளைவுகள் காட்டும். சொற்களெல்லாம் நெஞ்சத்தின் இயல்பு