பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 285


மில்லையா அதற்கு இது என்ன மோசம் போய்விட்டது?" என்று சமாதானம் கற்பித்துக் கொள்கிறார்கள். பலரிடம் வறுமை இருப்பதனால், வறுமையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றார்களோ? சிலரிடமுள்ள செல்வத்தில் தானே நாட்டம் வைக்கிறார்கள்! ஆதலால் வெளிப்பட இருந்து காட்டி, சீக்கிரத்தில் அணைக்கப்பெறும் தீயைவிட உள்ளிருந்து எரித்து அழிக்கும் தீமை மிகவும் கொடியது.

தீயினால் எரிவது வீடுகளேயாம். வீடுகள் மனிதனின் படைப்புகள். ஆனால் தீமையினால் அழிவதோ மனிதனே யாம். படைப்புப் பொருள்கள் அழிந்தால், திரும்பப் 'படைக்கலாம். படைப்புக்குரிய மனிதனே அழிந்து போனால்... இந்த வகையிலும் தீமை மிகக் கொடியது. தீயினால் விளையும் தீது ஒரோ வழி எல்லைக்குட்பட்ட தன்று. நில எல்லைக்கும் உட்பட்டதன்று. கால எல்லைக்கும் உட்பட்டதன்று. தீமை மனித சமுதாயத்தையே அழிக்க வல்லது. ஏழேழ் தலைமுறைக்கும் அழிக்கவல்லது. இந்த வகையிலும் தீயினும் தீமை கொடியது.

தீ, கூரையிலிருந்தால் கேடு. ஆனால், அடுப்பிலிருந்தால் ஆக்கம். அணையா அடுப்பு, வளம் நிறைந்த மனையின் சிறப்பு. ஆதலால், அடுப்பிலிருக்க வேண்டும். ஆனால், தீமை யினால் ஒரு வழியிலும் பயனில்லை. எந்த அளவிலும் பயன் தராது. பயன் தருவதுபோலத் தோற்றமளித்தாலும் சர்க்கரைப்பாகு தடவிய நஞ்சுருண்டையேயாம். நாவில் கரும்பின் இனிமை தென்படும். உடனேயே உயிர் கொல்லும் நஞ்சும் தென்படும். தீமையினால் வரும் பயன் கள்ளுண்டு களித்தல், வரைவின் மகளிர் மயக்கு -- எல்லாவற்றையும் விடப் பிணந்தழுவிய முயக்கு ஆகியன போலாம். ஆக ஒருபோதும் பயன்படாது. ஆதலால், தீயைவிடத் தீமை கொடியது. அதனாலன்றோ திருவள்ளுவர்,