பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 291



நல்ல மனம் படைத்தவர்கள், பிறருக்கு உதவி செய்வதைப் பெரும் பேறாகக் கருதுவார்கள். அப்படிப்பட்ட வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள். குறுந்தொகையில் தலைவன் பொருள்வயிற் பிரிகின்ற பொழுது, தலைவியிடத்தில் பொருள் திரட்டிக் கொண்டு கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவதாக உறுதி கூறிச் செல்கின்றான். அந்த உறுதிச் சொல்லை, நிறைவேற்றாமல் தவறிவிட்டால், “இரவலர் வாரா வைகல் பலவாகுக; யான் செலவுறுதகவே” என்று குறிப்பிடுகின்றான். கொடுத்து உவந்து வாழாத வாழ்க்கை, கொடிய துன்பமான வாழ்க்கை என்பது தமிழ்க் கருத்து.

சிலர் நாள் தோறும் பலர் தம்முடைய உதவியை நாடு தலைப் பேறாக -- சிறப்பாகக் கருதுவர். இரத்தல் எவ்வளவு துன்பமோ அதுபோலவே இரக்கப்படுதலும் சான்றோர்க்குத் துன்பம் தரும். இரந்து கேட்பவர்களுடைய மனம் நிறைவு பெறும்வண்ணம் ஈவதுதான் ஈதலுக்குச் சிறப்பு. அங்ஙனம் இன்றி, ஏதோ பெயரளவில் கொடுப்பதும் இரந்தவர் களுடைய வறுமை நோய்க்கு மருந்தாகாவண்ணம் வழங்குதலும் சால்பல்ல. இரந்தார் பேராசைக்காரராக இருந்தால் இரக்கப்படுதலும் தீது. அதுமட்டுமின்றி திளைத் துணை நன்றி செய்யினும் அதைப் பனைத்துணையாகக் கொண்டு மனநிறைவு அமையத்தக்க பண்பாடு இல்லாதவர்களாக இருப்பின் ஈதலில் மகிழ்ச்சி ஏது?

அதனாலன்றோ, உதவியின் சிறப்பு உதவியின் தரத்தையும் தகுதியையும் பொறுத்ததல்ல -- உதவியைப் பெறுவோரின் தகுதியைப் பொறுத்தது என்று திருக்குறள் கூறுகிறது. சான்றோர், நன்மனமுடையோர் ஒருவேளை உப்பில்லாக் கூழே குடித்திருந்தாலும் அதை என்றைக்கும் எண்ணிப் பார்ப்பர். அக் கூழ் இட்டவர்க்கு நல்லது எண்ணுவர். நல்லது செய்வர். அற்பமனத்தர் கீழ்மக்கள்