பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 295



செல்வத்துட்செல்வம்

லகியல், அருளால் வந்த விளைவு. இவ்வுலகத்தின் தோற்றமும், வளர்ச்சியும்கூட அருள் ஆக்கத்தின் பொருட்டேயாம். இவ்வுலகைக் கவிந்து எழிலும், இனிமையும் தரும் இயற்கை அருளின் சின்னம். இயற்கைக்கு எழிலும் வளமும் வழங்கும் வான் மழையே அருளின் பொழிவு. அருளென்னப் பொழியேலோர் எம்பாவாய்' என்பது மணிமொழி. இத்தகு அருட் செல்வம் பலவற்றுள்ளும் சிறந்ததாகும். திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் செல்வத்தைப்பற்றிய தவறான கருத்து மக்கள் மன்றத்தில் நிலவியது. அஃதாவது நிலம், வீடு, பொன் ஆகியவைகளையே செல்வம் எனக் கருதினர். அதனாலன்றோ இன்றையப் புற உலகில் செல்வம் நன்றாக வளர்ந்திருக்கிறது. அறிவுச் செல்வம், அருட் செல்வம் இரண்டும் செல்வம் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் வளர்க்கத் திருவள்ளுவர் முயற்சித்தார். அது செல்வம் மட்டுமல்ல. செல்வத்துள்ளும் சிறந்தது - தலையாயது என்று வலியுறுத்துகின்றார். பொருட் செல்வம் ஈட்டும் பொழுதும் துன்பம் தரும் - இழப்பிலும் துன்பந்தரும். அதுமட்டுமின்றி, பொருட் செல்வம் அருளோடு - அருள் உணர்வோடு உறவு கொள்ளாத பொழுது குவியும். பயன்படாதவர்களிடம் தேங்கும். அவ்வழி அழுக்காறு, அவா, வெகுளி போன்ற குணக்கேடுகள் தோன்றத் துணைசெய்யும். அருட்செல்வமோ, எஞ்ஞான்றும் இன்பந்தருவது. உடையவருக்கும் இன்பம் தரும். மற்றோர்க்கும் இன்பம் தரும். அருட் செல்வத்தினால் - அருட் செல்வம் உடைமையினால் சான்றாண்மை வளரும்; புகழ் பெருகும். அருளுடையோர் நெஞ்சம் தண்ணென்றிருக்கும். அங்கு அன்பின் ஈரம், கருணையின் கசிவு, எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். இத்தகு அருட்செல்வம், பொருட் செல்வத்தைப் போல எளிதில் கிடைக்கக் கூடியதன்று. பலகாலும் முயன்று