பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கை என்பது கடமை என்ற செயற்பாட்டுக்காகவே. சிறந்த சமய நெறியின்படியும் உயிர்கள் வாழ்க்கைக் களத்தில் கடமைகளைச் செய்வதன் மூலம் அறிவும் அனுபவமும் பெற்று இறுதியில் துன்பச் சூழலினின்றும் விடுதலை பெறுகின்றன என்றே கூறுகின்றது. சைவ நாயன்மார்கள் இத்தகு கடமைகளைச் செய்வதற்கு உயிர்கள் தமக்கு இயைபான களங்கள் அமைத்துக் கொள்ளுகின்றன. அத்தகு களங்களே இல்லறம் துறவறம் என்றமைகின்றன. இவை இரண்டும் கடமைகளின்பாற் பட்டனவே. இல்வாழ்வான் கடமைகள் சற்று தன்னலச் சார்பும், குடும்பச் சார்பும் தழுவியனவாக இருக்கும். இந்த வாழ்க்கைக்குச் சில விதிகள் உண்டு. துறவற வாழ்க்கைக்குத் தன்னலச் சார்பே இல்லாத - பிறர் நலம் கருதிச் செய்கின்ற கடமைகளே உண்டு. இங்கு விதிவிலக்குகள் மிக மிகக் குறைவு. ஏன்? இல்லையென்றே கூறலாம். ஆயினும், இவ்விருவகை வாழ்க்கையின் இலட்சியமும் கடமைகளைச் செய்தலே யாகும். துறவறம் அல்லது தவவாழ்க்கை என்றால் கடமை களினின்றும் விடுதலை பெறுதலல்ல. கதே என்ற தத்துவ ஞானி கூறியதுபோல, ஞானிகளின் கடமை உலகத்தைத் துறந்து ஓடி விடுவதன்று. உலகத்தோடு ஊடுருவி உண்ணின்று அதன் இயல்பறிந்து அதனுள் வீழாமல் - வீழ்பவர்களையும் காக்கப் பணிகள் செய்தலேயாகும்.


திருவள்ளுவர் துறவற இயலில் 'தவம்' என்ற அதிகாரத்தில்,

"தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றெல்லாம்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு”

(266)

என்று குறிப்பிடுகின்றார். இந்தத் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள், வாழ்க்கையைத் துறந்து தவம் செய்கின்ற வர்கள் தம்முடைய காரியத்தைச் செய்கிறார்கள் என்பது போலப் பொருள் காண்கிறார்கள். அங்ஙனம் செய்யாத