பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 313


நீட்டல்மட்டும் தன் இயல்பாகவே நிகழ்தல் உண்டு. அதாவது தன்னையும், தன்னுடைய உடலையும் மறத்தலின் காரணமாகத் தோன்றுதல். எனினும் இங்கு நீளுதல் என்றின்றி நீட்டல் என்றே திருவள்ளுவர் வினைவழிப் படுத்திக் கூறியிருத்தலான் செய்முறை என்றே கொள்ளல் வேண்டும்.

திருவள்ளுவர் இச் செய்தவத்தின் முறையை மறப்பதுபோலப் பலர் கருதுகின்றனர். அதற்குக் காரணமாக இருப்பது.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகு
பழித்தது ஒழித்து விடின்"

(280)

என்ற குறள். திருவள்ளுவர் உலகியல் முழுவதும் கண்டு உணர்ந்த சான்றோர் ஆதலின், அவர் முறையாகவே கூறியுள்ளார். அவர், மழித்தலையும் நீட்டலையும் முழுதுமாக மறுக்கவில்லை. அச் செயல் முறையைத் தன்னுடைய உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்திப் பழக்கத்திற்குச் சாதகமாகக் கைக் கொள்வதற்கு உடன்படுகிறார். தவம் முடிவல்ல - முயற்சியே. இம் முயற்சியில் வெற்றியடைவோர் சிலர், தோல்வியுறுவோர் பலர். ஆனாலும் தவம் செய்வதை மனப்பூர்வமான இலட்சியமாக ஏற்றுக்கொண்டு, தவம் செய்யும்பொழுது ஏற்படும் வெற்றி தோல்விகள் வேறு.

அந் நிலையில் ஏற்படும் தோல்விகளை, தவறுகளைப் பற்றியதல்ல திருவள்ளுவரின் கவலை. தவம் செல்வாக் குடையது என்று கருதி அதனை மேற்கொள்வதின் மூலம், தம்முடைய உல்கியல் வேணவாக்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கருதி, உலகியல் வாழ்க்கையை இலட்சியமாகக் கொண்டு அதனையடைய தவத்தினை ஒரு கருவியாகத் திட்டமிட்டு வஞ்ச மனத்தோடு மேற்கொள் வாரைப் பற்றியதே திருவள்ளுவரின் கவலை. இதனை,