பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 353



வகுத்தான் யார்?

னித வாழ்க்கையிலும், இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் ஊழின் உண்மையும் வலிமையும் வலியுறுத்தப் பெறுகின்றன. அண்மைக்கால முற்போக்குச் சிந்தனை யாளர்கள் ஊழின் உண்மையை மறுக்கின்றனர். ஊழைப் பற்றிய தெளிவான அறிவின்மையால், மனித வாழ்க்கை யிலேயே குழப்பங்கள் ஏற்படுகின்றன. இது, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

"ஊழின் உண்மை மறுக்க முடியாத ஒன்று. ஊழை மறுப்பதால் உலகாயதமே வளரும், பயனில்லை. ஊழ் தெய்வீக சக்தியுடையது. அது மாற்ற முடியாதது; அழிக்க முடியாதது” என்றெல்லாம் கருதுவது பேதைமை. ஊழ் உடல் தொடர்புடையதன்று. அஃது உயிர்த் தொடர்புடையது. உயிரின் நேற்றைய, அதற்கு முந்திய சிந்தனை - அதன் வழிப்பட்ட செயல் ஆகியவற்றின் பதிவுகளுக்கே ஊழ் என்று பெயர். ஒன்று, பிறிதொன்றின் விளைவு. விளைவற்ற சிந்தனையும், செயலும் உலகில் இல்லை . உயிர்கள் தாம் எண்ணிய - நினைத்த - உடலின் துணை கொண்டு செய்த செயல்களின் பயன்களை அவை அனுபவிக்கத் துணை நிற்பதற்கே ஊழ் என்று பெயர். நேற்றையச் சிந்தனை -- செயல் நல்ல வண்ணமாக இருக்குமானால், நல்லூழ். அவை தீயனவாக இருக்குமானால் தீயூழ் 'விதை ஒன்று போட சுரை ஒன்று முளைக்குமா?' என்ற பழமொழியுங்கூட இந்தக் கருத்தினை வலியுறுத்துவதாகவே அமைந்திருக்கிறது;

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" (377)

என்ற திருக்குறள் ஊழின் வலிமையை உணர்த்தும் குறள். இந்தக் குறட்பாவில் 'வகுத்தான்' என்ற சொல்லுக்கு தெய்வம்' என்று பொருள் கொள்ளுகின்றார் பரிமேலழகர்.

தி.23.