பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நம்மை மட்டுமல்ல. பெற்ற தாயைக்கூடத் தான் ஈன்ற மகனை அந்நியனைப்போலப் பார்க்கச் சொல்லுகிறார். இல்லை! பார்ப்பள் என்றே முடிவாகக் கூறுகிறார். "அறம்சாரா நல்குரவாளனை, ஈன்ற தாயும் பிறன் போலப் பார்ப்பாள்” என்பது வள்ளுவர் கூற்று.

அறம் என்ற சொல், ஆழமும் அகலமும் உடையது. வருவாய்த்துறையிலும், அறநெறிகள் உண்டு; செலவுத் துறையிலும் அறநெறிகள் உண்டு. முறையான உழைப்பின்றிச் சுரண்டுதல் மூலம் வரும் வருவாயும் இன்றில்லையானாலும், என்றோ ஒரு காலத்தில் வறுமைக்கே ஆளாக்கும். அதாவது சமூகத்தில் ஏமாற்றப்படுவோர்கள், விழித்துக்கொண்டவுடன் வருவாய் தடைப்படும்; வறுமை வந்தடையும். ஆதலால், உடற்சக்திக்கேற்றவாறு உழைத்தும் தம்முடைய நியாயமான பங்கைப்பெறுதல் அறவழிப்பட்ட வருவாயாகும். செலவை நிர்ணயிப்பதில் ஆசைத் தேவதையை அளவு கோலாகக் கொள்ளாமல் தன்னுடைய உழைக்கும் திறனையும் வருவாயையுமே மையமாகக்கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி ஒரு காசில் நடைபெறக் கூடிய காரியத்திற்குக் கூடுதலாகக் கொஞ்சம் செலவழித்தாலுங்கூட அஃது அறத்திற்கு மாறுபட்டது. எவ்வளவு குறைந்த தேவையில் வாழ முடியுமோ, அவ்வளவு குறைந்த தேவையில் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

அதுவே அறம்சார்ந்த வாழ்க்கை. இயற்கையாலோ, தெய்விகத்தாலோ, சமூக அநீதியாலோ வறுமை வந்திடின், அந்த வறுமையைத் துடைப்பது சமூகத்தின் பொறுப்பு. ஆனால், அறம்சாராத வாழ்க்கையின் மூலம் வறுமைவரின், ஈன்ற தாய்க்கும்கூடப் பொறுப்புக்களில்லை. அந்நியனைப் போலப் பாராது ஒதுக்கிவிடுதலே இயற்கையென்று வள்ளுவம் கூறுகிறது.