பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 389


அனைய ஆழமான நட்பு அருமையாகவே இன்று காணப்படுகிறது.

ஆதலால் காதல் என்பது ஒரு சிறந்த கலை; அருளார்ந்த கலை. மனித உலகத்தை அரித்து அலைக்கும் தன்னலத் தொழுநோயை மாற்றிடும் மாமருந்து காதல். பால்வேறுபட்ட இருவர் திருமணம் என்ற ஒரு சடங்கின்மூலம் இணைக்கப்பெற்று, ஒரு மனையில் சமைத்து உண்டு இனம் பெருக்கி வாழ்வதைக் காதல் என்று கருதிவிட முடியாது. சமூகத்தின் நிர்ப்பந்தங்களும், வயிற்றின் பசியும், பால் பசியும் இவைகளை நிர்ப்பந்தமாகப் படைத்திருக்கலாம். காதல், கட்டுப்பாடுகளைக் கடந்தது. ஆனாலும் சிந்தனையின் வரம்புக்கும், சீலத்தின் மாண்புக்கும் நிறை நலத்திற்கும் கட்டுப்பட்டதே காதல்.

இந்தக் காதல், உடற் புணர்ச்சிகளை அவாவி நிற்பதன்று. அஃதில்லாதபோது, அந்தக் காதல் உணர்ச்சி மங்கி மறையாது. பற்றிப் படரும் கொம்பும் மாறாது. அந்தக் காதல் பிரிவில் பேதலிக்காது. பிரிவில், நெருங்கி நின்ற பொழுதினும் அதிகமாக வளரும். இந்தக் காதல் ஊடலில் குலையாது; உலைவின்றி வளரும். சிறந்த காதல் நினைத்த அளவிலேயே இன்பத்தைத் தரும். கண்களால் கண்டபொழுதே இன்பத்தைத் தரும்; நினைத்தலிலும் காண்டலிலும் இன்பம் பெறும் சிறந்தவர்களே காதல் நன்மக்கள். இதனை,

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு"

(1281)

என்றார் வள்ளுவர், தட்பியலிலும்,

"புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்"

(785)