பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“செய்தி கொன்றார்க்கு உய்தி இல்லென
அறம் பாடிற்றே”

(34)

என்ற புறநானூற்றுப் பாடலில் திருக்குறள் “அறம்” என்றே பாராட்டப் பெறுகிறது. செய்ந்நன்றியறிதலாகிய இந்த அறம் இன்று மறைந்து வருகிறது. ஆனால் நன்றி கூறல் என்ற சடங்கு மேவி வளர்ந்து வருகிறது. திருவள்ளுவர் நன்றி கூறலை எடுத்துக் கூறவில்லை. ஒரு நல்ல சமுதாய அமைப்பிற்கு நன்றி கூறலும் தேவைப்படாது. ஏன்? மனிதராய்ப் பிறந்தோர் ஒருவருக்கு ஒருவர் கடமைப் பட்டிருக்கின்றோம். ஆதலால், நன்றி கூறும் அவசியம் எழ நியாயமில்லை. நன்றியறிதல் என்பது ஒருவர் சொன்ன - செய்த நல்லதை நினைந்து நினைந்து மகிழ்தலும், அந்த நல்லதை வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு ஒழுகுதலுமேயாம்.

அப்பரடிகளும் திருக்குறளைத் தமது திருமுறையில் எடுத்தாண்டுள்ளார். திருக்குறளில் இனியவை கூறல் என்ற ஒர் அதிகாரம் இருக்கிறது. அதில்

“இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”

(100)

என்பது குறள். இதனை அப்பரடிகள், “கணியிருக்கக் காய் கவர்ந்த கள்வ னேனே” என்று கூறுகின்றார். இன்னும் திருக்குறளை மையமாகக் கொண்டு பல நூல்கள் வெளி வந்துள்ளன. அவற்றுள் சிறந்தது முதுமொழி மேல்வைப்பு.

திருக்குறள் உலக மொழிகள் பலவற்றில் ஏறக்குறைய 86. மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது. உலகம் இன்று திருக்குறளைத் தனக்கு உரிமையாக்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பாரதி,

“வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று பாராட்டினான்.