பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 83


திருவள்ளுவர் ஒற்றரையும் நீதி நூலையும் அரசனுடைய இரண்டு கண்கள் என்று கூறுகின்றார்.

அரசன் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொண்டு பழகவேண்டும். நட்பு நன்னடை நல்கும்; உற்றுழி உதவும். மனித வாழ்வின் உறுப்புக்களில் சிறந்த உறுப்பு நட்பேயாம். பழகிய நண்பர்களிடமிருந்து எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிரியக்கூடாது.

மனிதப் பிறவி கூடி வாழப் பிறந்தது. கூடி வாழ்தலுக்குத் தடையாகிய பகையுணர்வு அறவே கூடாது. பகை, நோய் போன்றது. கூடி வாழும் பண்பை வளர்த்துக் கொள்ள இயலாமல் போனால் பகை என்ற நோயைச் சுமந்து துன்பப்பட்டுச் சாவதைத் தவிர வேறு வழியில்லை. பகையினால், பகையின் வழிப் பொருதலினால் புகழ் வரும் என்பது ஒரு மாயை. பகையில்லாத வழிதான் புகழ் வரும். துன்பமே தரும் பகையை நீக்கின் இன்பத்துள் இன்பம் கிடைக்கும். வலியாரிடம் பகை கொள்ளலாகாது. தம்மின் மெலியாரிடத்தும் பகை கொள்ளலாகாது. பகை வாழ்க்கையையே கெடுத்து விடுகிறது. நன்னெறிவழி ஒழுகும் இயல்பறியான், நல்ல பல செயல்களைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் கிடைத்தாலும் செய்யான், பழிக்கு அஞ்சான், பண்பில்லாதவன் முதலியோர் பகை இனிதேயாம் என்று புறநடை கூறுவார். விளையாட்டாகக்கூடப் பகை கொள்ளக் கூடாது. நாடாளும் அரசன் பகை கொள்ளாமலும் பகை கொள்பவன் தன்னைவிட்டு ஒதுங்காமலும் வைத்திருப்பது நல்லது. பகையில் உட்பகை மிகவும் கொடியது. நிழலில் கிடக்கும் தண்ணீர் குடிக்க நன்றாகத் தான் இருக்கும். ஆனால், பின் நோய் தரும். அதுபோலத்தான் உட்பகையுடையவனின் தொடர்பு நன்மைபோல் காட்டித் தீமை செய்யும். ஆதலால் உட்பகையைத் தவிர்க்க வேண்டும்.

திருவள்ளுவரின் அரசியலில் விவாதத்திற்குரியது பெண் வழிச் சேறல் ஆகாது என்பது. “மனை விழைவார் மாண் பயன் எய்தார்” என்றார்.