பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

91






மார்ச் 15


அறிவறிந்த ஆள்வினை தேவை! இறைவா அருள்க !


இறைவா, இந்த மனிதர்கள் விளையாடும் சாமர்த்தியத்தைப் பார்த்தாயா? என்ன சிரிக்கிறாய்? ஆம் இறைவா. முளைக் கொம்புக்கு வைக்கோல்புரி சுற்றுவது போல உடையைச் சுற்றிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களின் செயலின்மையைக் கண்டு இயற்கை சிரிக்கிறது; ஊர் அழுகிறது. வாழ்தலுக்கு வேண்டிய விழிப்புணர்வே இல்லை. ஐயோ! பிழைப்பு நடத்துகின்றனர். சிச்சி! இந்தப் பிழைப்பு நாயும் நடத்துமே. ஏன் இந்தக் கேவலம்? இறைவா, ஏன் இந்த அவமானங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாய் தாங்கிக் கொண்டிருக்கிறாய்?

இதுதான் நின் திருவிளையாட்டு, எலும்பைக் கடித்துக் குருதிகொட்ட வேதனையை அனுபவிக்கும் பொழுதுதானே நாய்க்கு எலும்புகடித்தலில் விருப்பம் குறைகிறது? அதுபோல நாங்களும் துன்பத்தில் சுழன்று எய்த்துக் களைத்தால்தானே தெரியும், நின் திருவருள் பெருமை!

துன்பம் இன்ப அன்பிற்கு ஆற்றுப்படுத்தும். துன்பத்தில் அழுதால் அதோ கதிதான். மாற்றும் கருத்தே தேவை. அறிவறிந்த ஆள்வினையே தேவை. எய்ப்பினில் வைப்பே. எங்கள் தவமே, போற்றி போற்றி! நின் அருட்கொற்றம்!