பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

95






மார்ச் 19


கால உணர்வைப் புரிந்துகொண்டு செயற்படும் புத்தியை அருள்க!


இறைவா, உன்னைக் காலங்கடந்தவன் என்று எல்லாரும் கூறுகின்றனர். நீ, காலங்கடந்தவனாக இருந்தும் உனது படைப்பில்-இயக்கத்தில் காலத்தை முதன்மைப்படுத்துகிறாய். நானும் காலங்கடந்தவனாக இருந்தால் என்ன? ஏன் இந்த வேற்றுமை? நானும் காலங்கடந்தவனாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். விருப்பம் போல் வாழலாம். அதுவும் இந்தக் காலதேவதை இருக்கிறதே, அது ஒரு நொடி கூடக் காத்திருப்பதில்லை. அது ஓடிக் கொண்டே இருக்கிறது. அதைத் தொடர்ந்து என்னால் கூட முடியவில்லை. நான் காலத்தை ஓட்டி ஓடும் அளவுக்கு வாழ்கிறேன்.

காலத்தை நான் தவறவிட்டு, விழாமல் உயிர்ப்போடு வாழ்ந்தால் காலம் எனக்குச் சேவை செய்கிறது. ஆனால், அயர்வினால் அரைநொடியேனும் விட்டுவிட்டால் வந்தது மோசம்! இறைவா, காலம் என்முதுகில் முத்திரை குத்தி விட்டு ஓடிவிடுகிறது. அதனால், காரியங்கைள் பரிகொடுத்து, பெருமையை இழந்து, கிழவனாகி எய்த்து அலைகிறேன். இறைவா, என்னையும் காலங் கடந்தவனாக்கினால் என்ன?

ஆம், இறைவா! நீ, காலம் என்னும் கடிவாளம் போட்டு இழுக்காவிட்டால் நான் மதர்த்த சோம்பலாய் கெட்டேபோவேன். இறைவா, காலனைக் காலால் கடிந்த கண்ணிய! என்னைக் காப்பாற்று. கால உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயற்படும் புத்தியைத் தருக! புண்ணியா, இனிக்கால தாமதம் செய்யேன்.