பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 20


இப்போதே நான் உயிர்ப்புடன் வாழ என்னை வாழ்த்துக!


இறைவா, தேவதேவா! என் உடல் சுறுசுறுப்பாய் இருக்கிறது. ஆம், இறைவா! உடலின் தேவைகளைக் கேட்டுப் பெறுவதில் உடல் என்றும் பின்தங்கியதில்லை. ஒழுங்காகச் சோறு கேட்கிறது; கூடி மகிழத் துணை கேட்கிறது. இவைகளை எந்தச் சூழ்நிலையிலும் அடைய முயற்சி செய்கிறது. அடைந்தே விடுகிறது. ஆனால் ஆன்மாவின் தேவைகள் என்னாயிற்று? ஆன்மாவுக்கு அழத்தெரியவில்லை. ஆன்மாவிற்குத் தன் தேவைகளைக் கேட்டுப்பெறத் தெரியவில்லை. ஆன்மாவில் ஒரே வெறுமை, வறட்சி. இறைவா, ஏன் இந்த அவலநிலை?

உடலை எவ்வளவு திருப்திப்படுத்தி வைத்தாலும் ஒரு காலத்தில் அது அழியக்கூடியது. ஆன்மா-உடலைத் துறந்து விட்டால் பட்ட மரத்திற்குரிய விலைமதிப்புக் கூட உடலுக்குக் கிடைப்பதில்லை. ஆம், இறைவா! பட்ட மரமாயினும் விறகுக்கு ஆகும். நான் எதற்கும் ஆகிலன்?

இறைவா; என்னைப்பார், என் ஆன்மாவில் பசியை உண்டாக்கு உடலால் வாழ விரும்பவில்லை, உயிர்வாழ ஆசைப்படுகிறேன். என்னை வாழ்த்து! உயிரின் தேவை வழங்கு.

ஆம், இறைவா! இப்போதே உடல் பயனுள்ள வாழ்க்கையை நடத்த அன்பை-அருளை வழங்குக! நான் அதனைப் போற்றிக் கொள்கிறேன். இப்பிறப்பிலேயே இல்லை, இறைவா இப்போதே நான் உயிர்ப்புடன் வாழ என்னை வாழ்த்துக!