பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மார்ச் 24
நன்மையே நன்மையைத் தரும்

<


இறைவா, உனது திருவுள்ளம் என்ன என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. புழு-இழிந்த ஒரு புழு, கக்கும் எச்சில் நேர்த்தியான பட்டு நூலாகிறது. என்னால் பட்டுப்புழு போன்று நேர்த்தியான செயல் எதுவும் செய்ய முடியவில்லையே! நானோ மனிதன். பகுத்தறிவு உடையவன். எனது செயலில் நேர்த்தியில்லை. ஏன், இறைவா? ஆம், நீ சொல்வது உண்மை. நான் ஒரு நேர்த்தியான படைப்பே. ஆனால், சுதந்திரத்தின் பெயரால் கெட்டுப்போனேன்.

பட்டுப்பூச்சிப்போல நான் ஒழுங்காக வாழ்வதில்லை. ஆனால், இறைவா, பட்டுப்பூச்சியிலும் நான் உயர்ந்தவனே. எப்படி? பட்டுப்பூச்சியின் படைப்பாகிய பட்டினை நானே அனுபவிக்கிறேன். எனது அனுபவங்களுக்குத்தானே உலகம் இயங்குகிறது. ஆம்! இறைவா, நீ சொல்வது உண்மை. இந்த அனுபவங்கள் இடையீடின்றிக் கிடைக்க நான் என்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்!

இறைவா, நான் நல்லவனாக உழைப்பாளியாக இருப்பது எனக்கு நல்லது. ஆம்! நன்மையே நன்மையைத் தரும்! இறைவா, என் பிழைகளைப் பொறுத்துக் கொள். இன்று முதல் நான் நல்லனவே எண்ணுவேன். நல்லனவே செய்வேன் இது உறுதி!