பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

103






மார்ச் 27


இறைவா, என்னை இந்த வையகம் பயனுற வாழச் செய்திடுக!


இறைவா, நான் கடன்காரனாகிவிட்டேன். நாள்தோறும் கடன் வளர்ந்து வருகிறது. ஆம், இறைவா! என்னைச் சுற்றியிருக்கும் ஐம்பூத உலகங்கள் என்னை வளர்க்கின்றன. தாவரங்கள் நாளும் எனக்கு உயிர்ப்புக் காற்றைத் தந்து வாழ்விக்கின்றன. அதுமட்டுமா? அம்மம்ம! உடலுக்கு உரம் தரும் காய்கனிகளைத் தருகின்றன.

நாளும் பசு, இன்சுவைப் பால் தந்து வாழ்விக்கிறது. அறிவியல் அறிஞர்கள் நுண்ணறிவினை வழங்கி வையத்தினைப் பயன்படுத்தி மண்மேல் பயனுற வாழும் வாழ்க்கையைக் கற்பித்துத் தருகின்றனர். இவ்வளவு பேருக்கும் என்னால் என்ன கைம்மாறு செய்ய இயலும்? நாளும் செய்யக்கூடிய சிறுசிறு செயல்களைக் கூட நான் செய்வதில்லை.

ஏன், இறைவா! நான் என்ன செய்ய? இயற்கையும், அறிஞர்களும் யாதொரு கைம்மாறும் விரும்பமாட்டார்கள். கைம்மாறு செய்யவேண்டிய அவசியமும் இல்லை. அதனால் இந்த முறையில் கடனாளியாதல் இல்லை.

ஆயினும் இறைவா, என்னை உயிர்ப்புக் காற்றினாலும், சுவைமிக்க கனிகளாலும் வாழ்விக்கும் செடிகளை-மரங்களை அழிக்காமல் பாதுகாக்கவும் மறுக்கின்றேன். இது நியாயமா? இறைவா, அவை மண்ணில் தலை காட்டியதிலிருந்து மாந்தருலகை வளர்க்கின்றன, வாழ்விக்கின்றன. ஏன், பட்டுப்போன பிறகும் எரியும் விறகாகி வாழ்வளிக்கின்றன. நானோ யாதொரு பயனும் இன்றி வாழ்கின்றேன். இறைவா, கருணை காட்டு. என்னை இந்த வையகம் பயனுற வாழச்செய்!