பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





மார்ச் 28


இறைவா, நீ எனக்குத் தோழனாக வந்துவிடு!

இறைவா, நீ எனக்கு வாழ்வுதந்து அருள் செய்தனை. நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையென்றால் பலரும் கூடுவர், கூடுதல் என்றாலே கூடும் அனைவரும் பொதுவான குறிக்கோள்களுடனேயே கூட வேண்டும். இங்ஙனம் கூடுவதே கூட்டம். என் வாழ்க்கையிலும் பலர் கூடினர். இன்னும் கூடிக்கொண்டிருக்கின்றனர்.

'பொதுமை', 'கூட்டுறவு', 'உழைப்பு', 'திருப்தி' என்பனவற்றின் பொருள் புரியாதோர் பலர் கூடியுள்ளனர். விறகுக் கட்டில் அடங்கிய குச்சிகள் போன்ற கூட்டம். பாலொடு சேர்ந்த சர்க்கரை போன்றதன்று இக்கூட்டம்! கூட்டை உடைக்க வேண்டாம் என்கிறாயா? இறைவா? இந்தக் கூட்டில் நான் படும் அல்லல், தலையில் அடித்துக் கொண்டு அழுமளவுக்குப் போகிறது. ஆம் தோளோடு தோளாக நிற்கும் தோழமையைக் காணோம். சுந்தரருக்குத் தோழனாக இருந்தாய், எவ்வளவு செய்தாய். நீ ஏன் எனக்குத் தோழனாக வரக் கூடாது.

நீ எனக்குத் தோழனாக வந்துவிட்டால் பிரச்னைகள் எளிதில் தீர்ந்துவிடும், இங்குள்ள அதிருப்தியாளர்களும் கிராக்கி செய்து கொள்ள மாட்டார்கள். இம்மண்ணுலகில் தோழர்களுக்காப் பஞ்சம். ஆட்கள் நிறையக் கிடைப்பார்கள். ஆனால், அவர்கள் நமக்காக இல்லை. அவர்கள் அவர்களுக்காகவேதான். நீயோ என் பொருட்டுத்தான். ஏன் என்றால் உனக்காகவென்று ஒன்றும் இல்லை! இறைவா, நீ, வா! தோழனாக வா!