பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 3


அக்கினிக் குஞ்சாக வாழ்ந்திட அருள் செய்!


இறைவா, நெருப்பு-எரிசக்தி...! ஆகா! என்னே நின் அற்புதம்! நெருப்பு ஒளியாகி வாழ்விக்கிறது. எரிசக்தியாகப் பயன்பட்டு எண்ணற்ற பொருள்களைப் படைத்துத் தருகிறது. தூய்மைக் கேடான பொருள்களுடனும் கலந்து தூய்மைக் கேடுகளைக் களைந்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது.

இறைவா என் உடலிலும் நெருப்பின் ஒருகூறு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன பயன்? இறைவா! உண்ட உணவைச் செரிக்கவே, ஆயிரம் பாடு. மருந்து மாத்திரைகள்.

இறைவா! இந்த உலகிலே தூய்மைக் கேடுகளை நாளும் உருவாக்குபவனே நான் தான். இறைவா, என்னை மன்னித்து விடு! அக்கினியைப் போல ஒளி படைத்த உடலினைத்தா. படைப்பாற்றல் மிகுதியும் உடைய மனிதனாக நான் வாழ அருள் செய்! தூய்மைக்கும் அழகுக்கும் தொண்டு செய்ய என்னை ஆளாக்கு இறைவா, நான் ஒரு அக்கினிக்குஞ்சாக வாழ்ந்திடத் திருவுளம் பற்றுக!