பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 9


அன்னையின் அருள் பெற, ஐயனே அருள் செய்க!


இறைவா, உமையொரு கேள்வனே, அன்னை மீனாட்சி ஆட்சி செலுத்த அருகிருந்த ஐயனே, பெண்மையைப் பெருமைப்படுத்தியவனே, உன்னை நாள்தோறும் வணங்கும் இந்த உலகம் பெண்களைக் கொத்தடிமைகளாக, போகப் பொருள்களாக நடத்துகிறதே. இச்செய்கை அறமா? புண்ணியம் தரத்தக்கதா? எடுத்ததற்கெல்லாம் ஒருவனைப் பழிக்க "மதுரை” என்று பரிகாசம் செய்கிறார்கள். தோப்புக் கரணம் போடுவதாகக் கூறுகிறார்கள்.

இறைவா, அன்னையின் திருவடிகளில் பிறைச் சந்திரன் ஒளிவிழுகிறதாம். கொன்றை மணம் கமழ்கிறதாம். இதற்கு என்ன பொருள்? நீயே என் அன்னையை நிலத்தில் வீழ்ந்து வணங்கியிருக்கிறாய். ஆம், இறைவா, நீ சொல்வது முற்றிலும் சரி. சக்தியைச் சரணடைதல் வாழ்வதற்கு வழி.

இந்த உலக இயக்கமே சக்தியினால் இயங்கும் இயக்கம். பெண்-சக்தி! அவள் படைக்கும் உணவினால் உடல் ஆற்றலையும், வழங்கும் உணர்வினால் ஊக்கத்தையும், அணைப்பினால் உயிர்க்கு மகிழ்ச்சியையும், அரவணைப்பினால் ஆறுதலையும் வழங்கி வாழ்விக்கிறாள்.

அன்னையைப் போற்றுவோம், ஆற்றலைப் பெறுவோம். அயரா அன்பினைப் பெறுதலே உயிரின் நோக்கமாகும். ஊக்கத்தினைப் பெறுவோம். இறைவா அன்னையின் கடைக்கண் அருளுக்குப் பரிந்துரை செய்தருளுக!