பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

117






ஏப்ரல் 10


கொண்டும் கொடுத்தும் வாழ்ந்திடும் பண்பினை அருள்க!


இறைவா, ஆலமே அமுதமாக உண்டருளும் உத்தமனே. நான் வயிறு நிறைய உண்கிறேன். உண்டு முடித்தபிறகு சற்று நிமிர்ந்து "போதுமா” என்று ஒரு தடவை வயிற்றைக் குலுக்கிச் சரிபார்த்துக் கொள்கிறேன். ஆனால், இறைவா! உடலார நிறைவு பெற்ற உழைப்பினை நான் செய்வதில்லை.

இறைவா, முழுமையான பயன் தரத்தக்க உழைப்பினை மேற்கொள்ள அருள் செய்க! மற்றவர் உழைப்பின் பயனை அனுபவிக்கிறேன். இதனால் அவர்களுடைய உழைப்பு நடிப்பல்ல என்று தெரிகிறது. ஆனால், என் உழைப்பின் பயனை யாராவது அனுபவிக்கிறார்களா?

இறைவா! கொண்டும் கொடுத்தும் இயங்குவது வாழ்க்கை. நான் கொள்ளவே ஆசைப்படுகிறேன். கொடுப்பதற்கு ஆசைப்படுவதில்லை. இறைவா, கொள்வதில் மன நிறைவு ஏது? மகிழ்ச்சி ஏது? கொடுப்பதில்தான் மனநிறைவு, மகிழ்ச்சி இருக்கிறது.

என் உழைப்பு, மற்றவர்கள் வாழ்க்கைக்கு உதவியாக அமைதல் வேண்டும். மற்றவர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இத்தகைய சீர்பெற்ற, உழைத்து வாழும் பண்பினை, அருள் செய்க! குறிக்கோளைக் குறிவைத்து அடையும் குறைவிலா உழைப்பே எனக்குத் தேவை. உழைத்தே உயிர் வாழ ஆசை. இறைவா, அருள் செய்க! ஐந்தொழில் நிகழ்த்திடும் முதல் உழைப்பாளியே! அருள் செய்க!