பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 11


காலமறிந்து தொழிற்பட அருள் செய்!


இறைவா! காலதத்துவத்தைக் கடந்த தேவதேவனே! இறைவா, உனக்குக் காலமில்லை. ஆனால் இறைவா, எனக்கு எல்லாமே காலமாக வல்லவா இருக்கிறது. நான் கால தத்துவத்திற்கு உட்பட்டவன். கால தேவதை வினாடி, வினாடியாக என் வாழ்க்கையைக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், நானோ "இன்று நன்று; நாளை நன்று” என்று பொழுதைக் கழித்துக் கொண்டிருக் கிறேன். இறைவா, என் காலத்தைக் களவாடும் கள்வர்கள் மிகுதி. அவர்களிடமிருந்து என் காலத்தைக் காப்பாற்றிக் கொள்ள அருள் செய்க!

காலம் அற்புதமானது. ஓயாது சுழல்வது, இயங்குவது. ஆனால், அதன் சுழற்சியில் நான் கலந்து கொள்ளாது போனால் தங்கிவிடுவேன். இளமையைத்தரும் காலத்தை நான் போற்றிட அருள் செய்க காலமறிந்து தொழிற்பட அருள்செய்க! காலம் காலமாக வாழ்ந்திடும் பயன் தரும் உழைப்பைக் காலமறிந்து செய்யக் கற்றுத் தருக.

காலம் ஓடுகிறது! நான் வார்த்தைகளைத் தடவித் தேடி உன்னை நோக்கிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இறைவா என் பிரார்த்தனையை உழைப்பாகவும் செலுத்தலாம். இறைவா, நீ உலகாக நிற்கிறாய். நின் உலகத்தைப் பாதுகாப்பதே வழிபாடு, வாழ்க்கை கால காலனே, காலமறிந்து வாழ்ந்திட அருள் செய்க!