பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

119





ஏப்ரல் 12


உன்னையே நம்பும் உயர் வாழ்க்கையினை அருள்க!


இறைவா, நம்பிக்கைக்குரிய எம் தலைவா! ஆனால் நான்தான் உன்னை நம்புவதில்லை! இறைவா, "நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு” என்பது என் வாழ்க்கையின் நியதியாக இடம்பெற அருள் செய்க!

என்னிடத்தில் எனக்கு நம்பிக்கை முதலில் வேண்டும். நான் மானிடன். வெற்றிபெறக்கூடிய மானிடன். நான் வாழ்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன், வாழப்போகிறேன் என்ற நம்பிக்கையை அருள் செய்க! திடமாக உன்னையே நம்பும் வாழ்க்கையினை அருள் செய்க!

ஒரு பொழுது உன்னை நம்புகின்றேன், எண்ணுகின்றேன். மறுபொழுது ஜோசியரிடம் ஓடி அலைகின்றேன். கழுவாய் செய்கின்றேன். இறைவா, இவையெல்லாம் வேடிக்கையாக இல்லையா? இந்த வேடிக்கை போதும். நான் உளேன். நான் ஒரு மானிடன். உன்னுடைய அடிமை. எனக்கு இங்கென்ன குறை? நின் திருவடிகள் தாங்குந் தகையன.

நான் தளராது உழைக்கும் கடமை பூண்டவன். இந்த நிலைமைக்கு அருள் செய்வாயாயின் இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இறைவா, அருள் செய்க! நின்னையே நம்பிச் சரணடைதலைக் கற்றுத் தா. நம்பிக்கையே வெற்றியின் அடிப்படை, நம்பிக்கையே உறவுகள் சங்கமிக்கும் இடம். அருள் செய்க!