பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

121





ஏப்ரல் 14


இறைவா, நின் அருளைப் பெறுவதற்கு அழக் கற்றுக்கொடு!


இறைவா, நின் அருள் கனியத் தாமதம் ஏன்? காலம் தாழ்த்துவது ஏன்? நின்னருளுக்குப் பாத்திரமாகும் பேறு எனக்கு இல்லையா? கல்லைப் பிசைந்து கனியாக்கும் வல்லாளன் நீ, நினக்கு அரிது எது? என்னைத் தகுதியுடையனாக்குதல் உனக்கு எளிது.

நரியைப் பரியாக்கிய நாயக! வித்தின்றியே விளைவு செய்யும் வித்தக! என்னை நின் தாளுக்குரிய பாத்திரமாக்குவது எளிது. ஆனால், நீ, அந்நியன் போல நடக்கிறாய். பழைய ஆவணத்தை மறந்து விட்டாய். "நீ ஆண்டான், நான் அடிமை” என்ற உடன்பாட்டா வணத்தை மறந்துவிட்டு அருள் செய்யக் காலம் கடத்துகிறாய். இறைவா, நின்அருள் பெறாதொழியின் என் ஆவி தரியேன். இறைவா, அருள் செய்க!

இறைவா, நின்னருள் பெறுதற்குத் தடையாக இருக்கும் அறியாமையை அகற்றுக, ஞானதீபத்தினை என் அகத்தினில் ஏற்றுக. 'யான்', 'எனது' அற்ற நிலையை அருள் செய்க. நின் சிவம்பெருக்குந் திருவடி என் தலைமேலாக இருக்க அருள் செய்க! என்னை நான் நாள்தோறும் மெய்யுணர்வு நிலையில் வளர்த்துக் கொள்ளும் வாயில்களை அருள் செய்க! நான் சூழ்நிலையின் அடிமையாகி விடாமல் சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் உரத்தினை அருள் செய்க!

நான் அழுதால் உன்னைப் பெறலாம். நான் அழ முடியவில்லையே. நான் பொய்ம்மையாக நடிக்கிறேன். என் நெஞ்சே, பொய்ம்மையின் இருப்பிடமாகிவிட்டது. நான் காட்டும் அன்பு பொய்யானது. ஆயினும் என்ன? நான் அழுதால் உன்னைப் பெறலாம். இறைவா, எனக்கு அழக் கற்றுக் கொடு.