பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஏப்ரல் 15


விட்டுக் கொடுத்து வாழும் பண்பினை அருள் செய்க!


இறைவா, ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே, ஒருவரை ஐயமற நம்புதல் வேண்டும். வழக்காடும் வம்புள்ளத்தினைத் துறத்தல் வேண்டும். இறைவா, என்னைச் சுற்றியிருப்பவர்களை நம்பும் நட்புப் பாங்கினை அருள் செய்க! சந்தேகம் என்ற தவறான மனக் குற்றத்திலிருந்து நான் முற்றாக விடுதலை பெற வேண்டும். இறைவா, அருள் செய்க!

நான் ஒரு செய்தியை, விவகாரத்தைப் பேசிமுடிக்க உட்காரும் பொழுதே சந்தேகத்துடன் உட்கார்ந்தால் எப்படி உளமார்ந்த விவாதம் இருக்க முடியும்? இந்தச் சூழ்நிலையில் மனங்கலந்த பேச்சுக்கூட வராதே! பாதிச் சிந்தனைகள் அடிமனத்தில் புதைந்து போகுமே. இறைவா, இந்தக் கொடுமையிலிருந்து என்னை மீட்பாயாக.

உள்ளத்தில் உள்ளதைப் பேசும் பாங்கினைத் தா. மற்றவர் கூறுவதை உள்நோக்கம் இல்லாது திறந்த மனத்துடன் கேட்கும் பாங்கினை அருள் செய்க! இறைவா, என்னை நானே காப்பாற்றிக் கொள்ளும் மனப்பான்மை-தீமையானது. என்னை, என்னைச் சார்ந்தவர்கள்தான் காப்பாற்ற வேண்டும். இவ்வண்ணமே அருள் செய்க!

வழக்காடும் போக்கு எனக்கு வேண்டாம். சமாதானமே என் வாழ்வின் இலட்சியமாக ஏற்க அருள் செய்க. விட்டுக் கொடுத்து வாழும் பேற்றினை அருள் செய்க! கொண்டும் கொடுத்தும் கூடிக் கலந்து வாழும் நிறை வாழ்வை அருள்செய்க!