பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

125






ஏப்ரல் 18


வையகம் பயனுறத் தக்கவாறு வாழ அருள் செய்க!


இறைவா, உன் திருவிளையாட்டில் எத்தனை ஒழுங்குகள். முறைபிறழாத நிகழ்ச்சிகள். இறைவா, என் வாழ்விலும் ஒழுங்குகள் அமைந்து விளங்கும்படி கருணை பாலித்திடுக!

இறைவா, இயற்கையில் விளங்கும் வாழை மரத்தைப் பார்க்கிறேன். எவ்வளவு ஒழுங்காக கோணல் - வளைவு இன்றி வளர்ந்திருக்கிறது. இறைவா. என்னுடைய வளர்ச்சியில் எவ்வளவு கோணல். சாயும் நாற்காலியின் தயவால் கூன் விழவில்லை. அந்த ஒழுங்குபட்ட அழகு என்னிடம் இல்லையே.

இறைவா, வாழை மட்டைகள் ஒழுங்குபட, ஒழுங்குற அடுக்கி வைத்தாற்போன்ற அமைவு, நாங்கள் பல பேர் அப்படி அமைவுறத் தழுவிய நிலையில் ஒழுங்கமைவுடன் வாழக் கற்றோமில்லையே.

இறைவா, வாழையின் பயனாகிய காய்கள் ஒழுங்குற அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப் பெற்ற நிலையில் உள்ளன. என் பணிகளை இப்படி அடுக்கிப் பார்க்க முடியவில்லையே. இறைவா, வாழைமரம் முழுதும் பயன்படுகிறது. பயன்படாப் பகுதி வாழை மரத்தில் இல்லை. நான் எங்கே முழுமையாகப் பயன்படுகிறேன்? இறைவா, ஏன் இந்த நிலை?

இறைவா, நான் என் உடலை, உணர்வை ஒழுங்கமைவுடன் வைத்துக் கொள்ள அருள் செய்ய வேண்டும்! இறைவா, என் வாழ்க்கை முழுதும் வையகம் பயனுறத் தக்கவாறு வாழ அருள் செய்ய வேண்டும்! இது என் பிரார்த்தனை. இறைவா, அருள் செய்க!